வாழ்க்கை ஒரு வட்டம்டா.. கொரோனாவால்.. ரவுண்டுக்குள் போன மனித வாழ்க்கையைப் பாருங்க!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக காய்கறிகடை மற்றும் மளிகை கடைகளில் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு வரையப்பட்டுள்ள வட்டத்தில் நின்று பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் திங்கட்கிழமை இரவு முதலே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதால், மக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டைவிட்டு வெளியே வருவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா தாக்கம்: நடப்பு நிதி ஆண்டை மாற்றி ரிசர்வ் வங்கி மாற்றி அமைக்கிறதா? உண்மை என்ன?
தடுப்பு ஏற்படுத்தி தடுக்கும் போலீஸ்
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்புகளை அமைத்து இருசக்கர வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி எச்சரித்து வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அவசர பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பத்திரிக்கையாளர்கள் உரிய அடையாள அட்டையை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
மாஸ்க் போடாமல் வரக் கூடாது
மேலும் நகரப் பகுதிகளில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். தேவையின்றி சுற்றித்திரியும் நபர்களை பிடித்து எச்சரித்தும், வழக்கும் பதிவு செய்தும் வருகின்றனர். இதனிடையே அரசின் உத்தரவை மீறி புதுச்சேரியில் கடைகளை திறந்து வைத்தல் மற்றும் வெளியே சுற்றிதிரிந்த 42 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
வட்டத்துக்குள் வாழ்ந்து பழகு
இந்நிலையில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க அத்தியாவசியப் பொருட்களை வாங்க கடைகளுக்கு வரும் பொதுமக்கள், கூட்டம் சேராமல் ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது. அரசின் உத்தரவை ஏற்று புதுச்சேரியில் உள்ள ஒருசில மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் அரசின் பாண்லே பாலகங்கள் புது முறையை அமல்படுத்தியுள்ளன.
ஒரு மீட்டர் இடைவெளியில் வட்டங்கள்
அதாவது அந்தக் கடைகளுக்கு வெளியே ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வட்டம் வரையப்பட்டுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் உள்ள காய்கறி கடை ஒன்றில் 20 க்கும் மேற்பட்ட வட்டம் வரையப்பட்டிருந்தது. இதில் பொதுமக்கள் நின்று தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். இந்த வட்டத்துக்குள் நின்று நின்றுதான் வரிசையில் வர வேண்டும். நல்ல இடைவெளி விட்டு இந்த வட்டங்கள் போடப்பட்டுள்ளதால் கூட்ட நெரிசலும் இல்லை. தேவையில்லாத பிரச்சினையும் இல்லை. பேசாமல் எல்லோரும் இதை கடைப்பிடிக்கலாம்.