அந்தரத்தில் தொங்கும் மீன்... பிளாஸ்டிக் மறு சுழற்சி.. வித்தியாசமான விழிப்புணர்வு.. அசத்தும் புதுவை
புதுச்சேரி: சுற்றுச்சூழல் பாதுகாப்பை வித்தியாசமான முறையில் வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது புதுச்சேரி. இந்த வித்தியாசமான முயற்சியை பலரும் பாராட்டி தாங்களும் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.
சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சம் எடுத்து வருகிறது. இதில் ஓரளவுக்குத்தான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய, ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலில் உள்ளது. தடையை மீறும் மக்களும் இருக்கிறார்கள். பிளாஸ்டிக்கின் அபாயத்தைப் புரிந்து கொண்டு தவிர்க்கும் மக்களும் அதிகரித்து வருகின்றனர்.
அவசரமாக திகாரில் டி.கே சிவக்குமாரை சந்தித்த சோனியா.. 15 நிமிட பேச்சு.. காங்கிரசில் என்ன நடக்கிறது?
மக்கள் விழிப்புணர்வு
மற்ற மாநிலங்களை விட தமிழகம், புதுவையில், பிளாஸ்டிக் பயன்பாடு கனிசமாக குறைந்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பொது மக்களிடமும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் பற்றி அதிகம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
புதிய முயற்சி
இந்நிலையில் புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள செயின்ட் அன்துவான் வீதியில் வசிக்கும் மக்கள் பிளாஸ்டிக் மறு சுழற்சி குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
மிதக்கும் மீன்
அதாவது தங்கள் வீடுகள் மற்றும் பயணங்களின் போது பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்களை சாலையோரம் வீசாமல், அவற்றை சேகரித்து வைத்து, ஒரு பிரம்மாண்ட மீன் வடிவத்தை உருவாக்கி தங்கள் வீதிக்கு நடுவே அந்தரத்தில் தொங்க விட்டுள்ளனர்.
மக்கள் ஆச்சரியம்
இந்த மீன் தற்போது அந்த வீதியின் ஒரு அலங்கார பொருளாகவே மாறியுள்ளது. இந்த மீனை அருகாமையில் வசிப்பவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்வது மட்டுமின்றி, தாங்களும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமும் பின்பற்றலாம்
பிளாஸ்டிக் மறு சுழற்சி குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ள செயின்ட் அன்துவான் வீதி மக்களை நாமும் பாராட்டலாமே. இதே போல அனைவருமே முயற்சி செய்து பார்த்தால் நிச்சயம் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.