அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த சகோதரர்..புதுவை சபாநாயகர் சிவக்கொழுந்து திடீர் ராஜினாமா
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் சிவக்கொழுந்து தமது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்களாக இருந்தவர்கள் 6 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து முதல்வராக இருந்த நாராயணசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த புதுவை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.
நாராயணசாமிக்கு எதிராக சபாநாயகர்
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 3 நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உரிமை இல்லை என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். ஆனால் 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு என்பதால் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
புதுவையில் ஜனாதிபதி ஆட்சி
இதனையடுத்து நாராயணசாமி அரசு கூண்டோடு ராஜினாமா செய்தது. இதனால் புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து பாஜகவில் ஐக்கியம்
இந்த நிலையில் நாராயணசாமி அரசை கவிழ்த்த எம்.எல்.ஏக்கள் ஜான்குமார், வெங்கடேசன் இருவரும் இன்று காரைக்காலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம், அவரது மகன் வி.சி.ரமேஷ் ஆகியோரும் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதனால் சிவக்கொழுந்தும் பாஜகவுக்கு தாவுகிறாரா? என்கிற கேள்வி எழுந்தது.
சபாநாயகர் திடீர் ராஜினாமா
இந்நிலையில்தான் உடல்நிலையை காரணம் காட்டி திடீரென தமது சபாநாயகர் பதவியை சிவக்கொழுந்து ராஜினாமா செய்திருக்கிறார். சிவக்கொழுந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.