புதுச்சேரியில் ரூ. 2042 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்.. நாளை முதல் ரூ. 2000.. அதிமுக வெளிநடப்பு!
புதுச்சேரி: நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும், புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
பேரவையில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாத செலவினங்களுக்கு ரூ. 2042 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும் கொரோனா பாதிப்பு தொடர்பாக பேசுவதற்கு அனுமதி தராததால் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் நிதி பற்றாக்குறை காரணமாகவும், மத்திய அரசிடமிருந்து உரிய நேரத்தில் நிதி கிடைக்காததாலும் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
நிதி செலவினங்கள்
அதன்பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டிலும் உரிய நேரத்தில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால் சட்டமன்ற கூட்டமே தள்ளிவைக்கப்பட்டது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையிலும், அடுத்த மூன்று மாத அரசின் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தேவையாக உள்ளது.
என்ஆர் காங்கிரஸ் கட்சியினர் வரவில்லை
அடுத்த மாதம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் ஒப்புதல் தருவது, நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெறும் வகையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டப்பேரவை இன்று கூடியது. சமூக இடைவெளிக்காக இருக்கைகள் சட்டப்பேரவையில் தள்ளி போடப்பட்டிருந்தது. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முக கவசமும், கிருமி நாசினி பாட்டிலும் தரப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸார் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை.
கருப்பு மாஸ்க்குடன் வந்த அதிமுக
மேலும் சட்டப்பேரவை நிகழ்வில் கலந்துகொள்ள வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர், அசானா ஆகிய 4 பேரும் அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றம்ச்சாட்டி கருப்பு மாஸ்க் அணிந்தும், கிருமி நாசினி தெளித்தவாறு சட்டப்பேரவைக்கு வந்தனர். இதனை தொடர்ந்து சரியாக காலை 9.30 மணிக்கு பேரவை தொடங்கியதும், மறைந்த தமிழக முன்னாள் அமைச்சர் அன்பழகன் மற்றும் கொரோனாவோல் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அன்பழகனுக்கு இரங்கல்
உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, அரசின் கூடுதல் செலவின மதிப்பீடுகளை காட்டுக்கின்ற அறிக்கையை முதலமைச்சர் நாராயணசாமி பேரவையில் தாக்கல் செய்தபோது, கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பாக பேச அதிமுக சட்டப்பேரவை தலைவர் எம்எல்ஏ அன்பழகன் அனுமதிக்கோரினர். இறுதியில் வாய்ப்பு தருவதாக சபாநாயகர் சிவகொழுந்து தெரிவித்தார். அதை ஏற்காமல் அதிமுக எம்எல்ஏகள் சபாநாயகர் இருக்கை முன்பு சென்று முற்றுகையிட்டு வலியுறுத்தினர்.
அதிமுகவினர் வெளிநடப்பு
ஆனால் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் ஆனதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இச்சூழலில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களுக்கு ரூபாய் 2042 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி பேரவையில் தாக்கல் செய்தார். மேலும் நாளை முதல் மக்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி ரேஷன் கார்டுக்கு ரூ. 2000 நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.