கொரோனா.. அனைத்து ரேஷன் கார்டுக்கும் ரூ 2000 உதவி.. நாராயணசாமி அதிரடி!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் எதிரொலியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியாகியுள்ளனர். மேலும் 492 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தனிமைப்படுத்தலை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமென மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
எனினும் பல்வேறு மாநிலங்களில் அரசின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றாததால், கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், பல்வேறு மாநில அரசுகள் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவுகாளால் பொதுமக்கள் வேலையிழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு மாநில அரசு நிவாரண உதவித்தொகையை அறிவித்துள்ளன. தமிழகத்திலும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும், ரேசன் கடைகளில் விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனாவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக, முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் தலைமை செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் நிதித்துறை செயலருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால், அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ, ரிக்சா ஓட்டுநர்கள், விவசாயிகள், மீனவர்கள், கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வேலையிழந்துள்ளனர். மேலும் ஊரடங்கு உத்தரவால் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும். விரைவில் அவரவர் வங்கி கணக்கில் இதற்கான பணம் வரவு வைக்கப்படும். இதன் மூலம் 3 லட்சத்து 44 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு 68 கோடியே 88 லட்சம் செலவாகும் என தெரிவித்தார்.