தொகுதி மக்களுக்கு 5 கிலோ அரிசி.. வீடு வீடாக சென்று வழங்கிய புதுவை முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகளை முதல்வர் நாராணசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் நெல்லித்தோப்பு தொகுதி மக்களுக்கு தனது சொந்த செலவில் 5 கிலோ அரிசியையும் முதல்வர் வழங்கினார்.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் முதல்வர் நாராயணசாமி புதுச்சேரியின் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டு தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று முதல்வர் நாராயணசாமி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த பொதுமக்களிடம் காய்கறி விலைகளை கேட்டறிந்த அவர் தனிமனித இடைவெளிவிட்டு பொருட்களை வாங்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் முகக்கவசம் வழங்கினார்.
தொடர்ந்து ரெட்டியார்பாளையம், மூலகுளம், வழுதாவூர் ரோடு ஆகிய பகுதிகள் மற்றும் மார்க்கெட் கமிட்டியில் உள்ள தற்காலிக காய்கறி கடைகளையும் ஆய்வு செய்த முதல்வர் நாராயணசாமி பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்கினார். இதேபோல் அஜந்தா சிக்னல் மற்றும் முத்தியால்பேட்டை மார்க்கெட் எதிரில் உள்ள தற்காலிக காய்கறி கடைகளையும், எல்லைப் பகுதியான கோட்டக்குப்பம் சந்திப்பிலும் மற்றும் நகர பகுதிகளில் உள்ள தற்காலிக காய்கறி கடைகளை பார்வையிட்ட முதல்வர் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறை அதிகாரியிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து தன்னுடைய நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் முதல்வர் நாராயணசாமி தனது சொந்த செலவில் தலா 5 கிலோ அரிசியை வீடுவீடாக சென்று வழங்கினார். தொடர்ந்து தொகுதியில் உள்ள சிவப்பு அட்டைதாரர்களுக்கு 3 கிலோ பருப்பையும் அவர் வழங்கினார்.