புதுச்சேரி வளர்ச்சி கிரண்பேடிக்கு பிடிக்கவில்லை.. அவருக்கு கெட்டெண்ணம்.. நாராயணசாமி தாக்கு!
புதுச்சேரி: புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து இடைஞ்சல் செய்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டு, மூன்றில் ஒரு பங்கு அரசு ஊழியர்கள் பணிக்கு வருகின்றனர். எந்த புதிய தொழிற்சாலையும் திறக்கப்படவில்லை. விவசாய வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கட்டிடத் தொழிலாளர்களின் பணிக்கு தடையில்லை உள்ளிட்ட மத்திய அரசின் உத்தரவுகளை நாம் முழுமையாக நிறைவேற்றியுள்ளோம். புதுச்சேரியில் இலவச அரிசி வழங்குவதில் மிகப்பெரிய குழப்பம் இருந்து வருகிறது. அரிசி எடுத்து வந்து சுமார் 1 மாதமாகியும் சுமார் 40 சதவீதம் மக்களுக்குக் கூட அரிசி வழங்கப்படவில்லை.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை கொடுத்து, ரேஷன் கடை மூலமாக அரிசியை விநியோகிக்கலாம் என நாங்கள் கூறியதை கேட்காத ஆளுநர் கிரண்பேடி, தேவையில்லாமல் தலையிட்டு, அரிசியை பேருந்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உதவாத கருத்தைக் கூறி, மக்களுக்கு உரிய காலத்தில் அரிசி சென்று சேராத நிலையை உருவாக்கியுள்ளார்.
கிரண்பேடி புதுச்சேரி மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படக் கூடாது என்பதற்காக தொடர்ந்து இடைஞ்சலை செய்து வருகிறார். புதுச்சேரி மாநில மக்கள் வளரக்கூடாது என்பது அவருடைய எண்ணம். துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரி மாநில மக்களுக்காக, மத்திய அரசை அணுகி, மாநில நிதியைப் பெறுவதற்கு எந்த உதவியும் செய்யவில்லை.
வாழ்த்துகள் சார்.. உங்களுக்கு கொரோனா இல்லை.. நாராயணசாமிக்கு நல்ல சேதி சொன்ன டாக்டர்ஸ்!
ஆனால் மாநில அரசு நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் குறியாக இருக்கிறார். புதுச்சேரி மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்று சேரக்கூடாது என்பதற்காக அவர் அரசின் அனைத்து முடிவுகளிலும் தலையிட்டு, அதனை காலதாமதப்படுத்தி, மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்று சேராத அளவுக்கு முட்டுகட்டை போட்டு வருகிறார்.
இது தொடர்பாக பிரதமர், உள்துறை அமைச்சருக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளேன். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. புதுச்சேரியில் பொதுமக்களை பலமுறை அறிவுறுத்தியும் கடைகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2 நாட்களில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை வரை பார்ப்போம். மக்கள் தொடர்ந்து தெருவில் நடமாடினால் 3 நாட்களுக்கு ஒரு முறை கடைகள் திறக்கப்படும் என்ற கட்டுப்பாட்டை அரசு கொண்டு வரும் என நாராயணசாமி தெரிவித்தார்.