பிரஸ்மீட் கேன்சல்.. ஆடியோ மெசேஜ் வெளியிட்ட நாராயணசாமி.. கொரோனாவால் அதிரடி!
புதுச்சேரி: டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு புதுச்சேரிக்கு திரும்பியவர்கள் தாமாக முன்வந்து அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென, மாநில முதலமைச்சர் நாராயணசாமி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு புதுச்சேரி திரும்பிய இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானது. இதனையடுத்து கொரோனா தொற்று புதுச்சேரியில் மேலும் பரவாமல் தடுப்பது தொடர்பாக மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டப்பேரவையில் ஆலோசனை நடத்தினர்.
இதன் பின்னர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள நாராயணசாமி, டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் புதுச்சேரியில் இருந்து 17 பேரும், காரைக்காலில் இருந்து 4 பேரும் கலந்துகொண்டனர். இதில் புதுச்சேரியை சேர்ந்த 6 பேரும், காரைக்காலை சேர்ந்த 3 பேரும் கடந்த 24 ஆம் தேதியன்று வீடு திரும்பிய நிலையில், மீதமுள்ளவர்கள் டெல்லியில் தங்கியுள்ளனர். மேலும் புதுச்சேரியை சேர்ந்த அந்ந 6 பேரும் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், அரியாங்குப்பத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3 பேர் தனிமை
இதேபோல் காரைக்காலை சேர்ந்த 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு வீடு திரும்பிய பின்னர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் யார், யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
டெல்லியில் நடந்த மாநாடு
டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்தவர்கள் யாராவது கலந்துகொண்டு புதுச்சேரிக்கு திரும்பி வந்திருந்தால் தானாக முன்வந்து அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்கள் தானாக முன்வந்து மருத்துவ பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்தார். மேலும் கொரோனா அச்சம் பொதுமக்களுக்கு இருந்தால் அவர்கள் தொலைபேசி மூலம் தகவல் தந்தால், மருத்துவர்கள் அவர்களது வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்வார்கள்.
யார் யாருடன் தொடர்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடம் தொடர்பு உள்ளவர்கள் யார், யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தேவையெனில் ராணுவத்தின் உதவியை கோருவோம் என தெரிவித்தார். கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ தொடங்கியதிலிருந்தே புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி அரசு தினந்தோறும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் முதல்வர் விளக்கி வருகிறார்.
ரத்தான பிரஸ்மீட்
முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்து வந்தார். இதனிடையே புதுச்சேரியில் இன்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதுகாப்பு கருதி இன்று முதல் செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்துள்ளார் முதலமைச்சர் நாராயணசாமி. மாறாக தன்னுடைய பேச்சை வீடியோ பதிவு செய்து ஊடகங்களுக்கு அனுப்புமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.