ஊரடங்கு அமல்படுத்தினாலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது.. வேகமாக பரவுது.. நாராயணசாமி..
புதுச்சேரி: ஊரடங்கு இருந்தாலும், இல்லாவிட்டாலும் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் தங்களின் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் 110 பேருக்கும், 161 போலீஸாருக்கும் மற்றும் பொதுமக்கள் 41 பேருக்கும் பரிசோதனை செய்ததில் அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது.
காரைக்காலில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த 76 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதனுடைய முடிவு வரவேண்டியுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றின் ஆதிக்கம் மிகப்பெரிய அதிகளவில் இருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கடந்த காலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது தற்போது மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சமூக பரவல் தொடங்கிவிட்டதா? தமிழகத்தில் 3 மாவட்டங்கள் உள்பட 69 மாவட்டங்களில் ஐசிஎம்ஆர் ஆய்வு
நடவடிக்கை
கொரோனா தொற்றை முழுமையாக தடுத்து நிறுத்த மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் மாநில அரசு ஒன்றும் செய்ய முடியாது. கொரோனா பாதிப்பில் அகில இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தில் அதிகளவில் கரோனா தொற்று தென்படுகிறது.
இச்சூழ்நிலையில் நாம் புதுச்சேரி மாநில மக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
கட்டாயம்
குறிப்பாக மத்திய அரசின் அறிவுரைகளை முறையாக கேட்டு நடவடிக்கை எடுக்கிறோம். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவர்களை அனுப்பி பரிசோதனை செய்யப்படுகிறது. புதுச்சேரியில் மக்கள் ஓரளவு தனிமனித இடைவெளியை கடைபிடிக்கின்றனர். ஆனால் மாலை நேரத்தில் சிலர் வெளியே உலாவுகின்றனர். சகஜ வாழ்க்கையை நாம் பார்த்தாலும் கூட இப்போது தங்களின் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
வாழ்த்துகள்
கொரோனாவுடன் நாம் வாழ வேண்டும் என்று கூறுகின்றனர். ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆகவே இதையெல்லாம் உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும். நம் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க மிகப்பெரிய பங்கு மருத்துவர்களுக்கு அடுத்ததாக செவிலியர்களுக்கு இருக்கிறது. அவர்களுடைய தியாகம் இல்லாமல் கொரோனாவை தடுத்து நிறுத்த முடியாது. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
காணொலி காட்சி
புதுச்சேரி மாநிலத்தின் நிதிநிலை குறித்து பிரதமருடன் காணொலி காட்சி வழியாக பேசும்போது விளக்கமாக கூறினேன். மாநிலத்துக்கு நிதி வருவாய் தேவைப்படுகிறது. கடன்கள் வாங்க எந்தவித எல்லையும் இல்லாமல் உதவ வேண்டும். மார்ச், ஏப்ரல் மாதத்துக்கான பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை மத்திய அரசு கொடுக்க வேண்டும்.
6 மாத காலம்
மத்திய அரசு ஜிஎஸ்டி நிலுவை தொகை, மாநிலத்துக்கு வரிகள் மூலம் கிடைக்கும் 41 சதவீதம் தொகை, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் ஊதியம், 7 வது ஊதியக்குழுவின் 4 ஆண்டுகால நிலுவைத் தொகையை ஆகியவற்றை வழங்க வேண்டும். வாங்கிய கடன்களை வட்டியில்லாமல் செலுத்த 6 மாத காலம் அவகாசம், ரிசர்வ் வங்கியில் தாராளமாக கடன் பெற அனுமதி வழங்க வேண்டும்.
மதுக் கடைகள்
மதுக்கடைகளை தவிர தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 1.25 லட்சம் பேர் தவித்து வருகின்றனர். ஆகவே சுற்றுலாவை மேற்படுத்த திட்டம் வேண்டும் என்று தெரிவித்தேன். மேலும் 3 முறை ஊரடங்கை அறிவித்த நிலையில் அதனை நாங்கள் நடைமுறைப்படுத்தினோம்.
மக்கள்
இதனால் கொரோனா தொற்றின் பாதிப்பு எங்கள் மாநிலத்தில் குறைந்துள்ளது. 4 வது முறையும் ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் நிறைய தளர்வுகளை கொடுக்க வேண்டும். ஊரடங்கு இருந்தாலும், இல்லாவிட்டாலும் கொரோனா தொற்று பரவுகிறது. அதனை மக்களும் கடைபிடிப்பதில்லை என்று பிரதமரிடம் வலியுறுத்தி கூறினேன்.
மாநிலம்
அப்போது பிரதமர் பேசியதிலிருந்து, மே 17 க்குப் பிறகு 4 வது ஊடரங்கு தொடரும் எனத் தெரிகிறது. எப்படி இருந்தாலும் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். மக்களை பாதுகாக்க வேண்டும். ஆகவே மாநில வருவாயை உயர்த்தி மாநிலத்தை பாதுகாக்க பாடுபட வேண்டுமென நாராயணசாமி தெரிவித்தார்.