ரகசிய துறைகளை தனியார் மயமாக்குவது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல.. நாராயணசாமி சாடல்
புதுச்சேரி: மத்திய அரசு ரகசிய துறைகளை தனியார் மயமாக்குவது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் 6 பேர், காரைக்காலில் 2 பேர் என மொத்தமாக மாநிலத்தில் 8 பேருக்கு தற்போது கொரோனா தொற்று உள்ளது. புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரையில் புதுச்சேரியில் இருந்து 800, காரைக்காலில் இருந்து 500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் உத்திரபிரதேசம், பீகாருக்கு சிறப்பு ரயில் மூலம் இன்று இரவு புறப்படுகின்றனர்.
அவர்களுக்காக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.14 லட்சம் ரயில் கட்டணம், உணவுக்காக கொடுத்துள்ளோம். மேற்கு வங்காளம், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் ஒருவாரத்தில் செல்ல ஏற்பாடு செய்து வருகிறோம். ஜம்மு காஷ்மீர் தொழிலாளர்கள், மாணவர்கள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்க அம்மாநில நிர்வாகத்தின் அனுமதியை கேட்டுள்ளோம். அவர்கள் அனுமதி கொடுத்தவுடன் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அதேபோல் வெளிமாநிலங்களில் உள்ள புதுச்சேரியை சேர்ந்த 1,100 பேரும், பிரான்ஸ், சிங்கபூர், மலேசியா, சவுதி அரேபியா போன்ற வெளி நாடுகளில் இருப்பவர்களையும் நம்முடைய மாநிலத்துக்கு அழைத்துவர வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடர்ந்து 4 நாட்களாக பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டத்தை அறிவித்துள்ளார். அவர் கூறிய அனைத்து அம்சங்களையும் நாம் பார்க்கும்போது, குறிப்பாக ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை பொதுத்துறையும், தனியார் துறையும் இணைந்து செயல்படும் ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் அனைத்தையும் தனியார் மயமாக்கும் ஒரு நிலையை மத்திய அரசு இப்போது செயல்படுத்த முனைந்துள்ளது. ரகசியமாக இருக்க வேண்டிய சில துறைகளைக்கூட தனியாரிடம் ஒப்படைக்கும் ஒரு நிலையை உருவாக்கியுள்ளனர். இது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல.
ஆனாலும் சில துறைகளில் அவர்கள் அறிவித்துள்ளதை எப்படி மக்களிடம் கொண்டு செல்ல போகின்றனர் என்பதை மத்திய அரசு கூறவில்லை. குறிப்பாக விவசாயிகளுக்கு அறிவித்துள்ள அறிவிப்புகள் எந்த காலத்தில் அவர்களுக்கு சென்று சேரும் என்பது குறிப்பிடப்படவில்லை. இப்படி பல குளறுபடிகள் அந்த அறிவிப்பில் இருக்கின்றன. அதனை மத்திய அரசு சரிசெய்ய வேண்டும். அதற்கான விளக்கத்தையும் நிதியமைச்சர் மக்கள் மத்தியில் விரிவாக கூற வேண்டும்.
தமிழகத்திற்கு புது சவால்.. 20% கொரோனா பாதிப்பு அதிகரிப்பு பின்னணி இதுதான்.. விஜயபாஸ்கர் சொன்ன தகவல்
பிரதமர் மாநில முதல்வர்களுடன் காணோளி வழியாக ஊரையாடியபோது மாநில அரசுகளின் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக அனுப்ப வேண்டும் என்று கூறியிருந்தார். எங்களுடைய கருத்துக்களை அனுப்பியுள்ளோம். கடைகள், ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்க வேண்டும். திரையரங்குகள் இல்லாமல் மால்களை திறக்க வேண்டும். இவைகளில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
வெளிமாநிலத்தில் இருந்து வரும் பொருட்கள், இங்கிருந்து செல்லும் பொருட்களை யாரும் தடுத்துவிடாத வகையில் உத்தவிட வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் திறக்க கால அவகாசம் வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு தேர்வு இருப்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பயிற்சி பெற அனுமதி தர வேண்டும். சுற்றுலா நலிந்துள்ளதால் படிப்படியாக சுற்றுலாவை வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களுடைய அரசை பொறுத்தவரை அனைத்து துறைகளையும் திறந்துவிட்டு மக்கள் சகஜமாக மார்க்கெட்டில் அத்தியாவசியம் மற்றும் அத்தியாவசியமில்லாத பொருட்களை வாங்குவதற்கு அனுமதி வழங்க தயாராக உள்ளோம். இந்த ஊரடங்கை பல மாதங்கள் நீடிப்பது கூடாது. இதனால் மாநிலத்தின் நிர்வாகம் பாதிக்கப்பட கூடும். சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம் பச்சை மண்டலம் என நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என பல கருத்துகளை பிரதமரிடம் நாங்கள் பதிவு செய்துள்ளோம்.
மத்திய அரசானது மாநிலங்களுக்கு வருமான இழப்பை ஈடு செய்ய வேண்டும் என பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளோம். நாளைய தினம் மத்திய அரசு அவர்களது கருத்துகளை தெரிவிக்கும் என தெரிகிறது. அது முடிந்த பிறகு நாளை மறுநாள் (மே 18) எங்களது அமைச்சரவை கூடி மாநிலத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது சம்மந்தமாக முடிவெடுக்க உள்ளோம். மதுகடைகளை திறப்பது சம்பந்தமாக தமிழக அரசு தீர்ப்பு பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் மதுகடைகளை திறந்துள்ளனர்.
புதுச்சேரியிலும் மதுகடைகளை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளோம். மாநிலத்தின் நிதி பற்றாக்குறை சரி செய்வதற்கும், வருமானத்தை பெருக்குவதற்கும் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதற்கான ஆயுத்த வேலைகளை செய்து வருகிறோம் என நாராயணசாமி தெரிவித்தார்.