கொரோனா எதிரொலி.. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஷிப்ட்.. வாரத்துக்கு 50% பேர் மட்டும் வந்தால் போதும்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் முதல் வாரமும், அடுத்த வாரம் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றும் ஷிப்ட் முறை வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைபடுத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
காணொலி கட்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, பாரத பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பேசியதாகவும், அப்போது பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கொரோனாவிற்கு தேவையான உபகரணங்கள் கிடைக்கவில்லை என்றும், இதற்கு மத்திய அரசு நிதி உதவிட வேண்டுமென வலியுறுத்தியதாகவும், வேலையில்லாத ஏழைகளுக்கு குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலமாக கோதுமை போன்ற உணவு பொருட்களை வழங்க வேண்டுமென பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் முதல் வாரமும், அடுத்த வாரம் 50 சதவீத ஊழியர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றும் முறை வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறை படுத்தப்படும் என தெரிவித்தார். மேலும் பிரதமர் கேட்டுக்கொண்டதன்படி வரும் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி மாநில மக்கள் தங்களின் வீடுகளில் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மருத்துவ துறையில் உன்னதத்தை எட்டிய கியூபாவில் 21 பேருக்கு கொரோனா- ஒருவர் பலி- 716 பேருக்கு பரிசோதனை
இதனிடையே புதுச்சேரியில் வரும் மார்ச் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் கொரோனா நோயால் ஒரு மூதாட்டி பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு அருகே உள்ள மாஹேவில் மறு அறிவிப்பு வரும் வரை 144 தடை உத்தரவு அந்த மாவட்ட நிர்வாகத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.