கொரோனாவுக்கு பயப்படாத புதுச்சேரி.. கைது செய்து ஓராண்டு சிறை.. நாராயணசாமி அதிரடி!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டைவிட்டு வெளியே வருபவர்களுக்கு ஒராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி மாநில அரசு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தடுக்க கடந்த 22 ஆம் தேதி இரவு 9 மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை புதுச்சேரி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்றைய தினம் தடை உத்தரவையும் மீறி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவுக்கு பதிலாக, நேற்று இரவு முதல் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவையும் மதிக்காத புதுச்சேரி மக்கள் வழக்கம்போல் தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மூலம் இன்று நகர்ப்புறம் மற்றும் கிராமப் பகுதிகளில் உலா வந்துகொண்டிருந்தனர். மேலும் வெளியே சுதந்திரமாக செல்ல அனுமதிக்குமாறு, போலீசாரிடம் பல இடங்களில் பொதுமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பொதுமக்களின் இத்தகைய நடவடிக்கைகளை காவல்துறையினர் முதலமைச்சர் நாராயணசாமியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி இது தொடர்பாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காகவும் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு அவசர அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொரோனாவுக்காக நிதி ஒதுக்குவது, போதுமான மருத்துவ உபகரணங்கள் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்கவில்லை. புதுச்சேரி மக்களுக்கு உயிரைப் பற்றி கவலை இல்லை. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்து மக்கள் காவல்துறையினரிடம் சண்டைப்போட்டு, தகராறில் ஈடுபடுகின்றனர். மக்களின் இத்தகைய செயல் மிகவும் வேதனை அளிக்கிறது என்றார்.
மேலும் புதுச்சேரி மக்களின் நலனுக்காக அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் கூட்டு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். மேலும் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு ஒராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், புதுச்சேரியில் மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்கு தேவைப்பட்டால் துணை ராணுவப் படை உதவியும் கோரப்படும் என்றார்.
மேலும் பேசிய அவர், நாளை முதல் வருகின்ற 28 ஆம் தேதி வரை மருந்தகங்களை தவிர அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.