உத்தரவுகளை கடைபிடிக்காத மக்கள்.. மனசு உறுத்தலா இருக்கு.. நாராயணசாமி வேதனை!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் உத்தரவுகளை கடைபிடிக்காமல் வெளியே வந்து அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி வேதனை தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் நலமாக இருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான மருந்துகளை மருத்துவர்கள் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக இருக்கின்ற முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையத்தில் சுமார் 216 பேருக்கு உமிழ்நீர் எடுத்து மருத்துவ பரிசோதனை செய்தனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. அதுபோல் 38 பத்திரக்கையாளர்களுக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.
புதுச்சேரியில் கடைகள், தொழிற்சாலைகளை திறக்கலாம் என்றும், முக்கசவம் அணிந்து வர வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், இருசக்கர வாகனங்களில் இருவர் செல்லலாம் என்று எங்களுடைய அமைச்சரவையில் முடிவு செய்து தெரிவித்தோம். ஆனால் ஒரு சில காவல்துறையைச் சேர்ந்தவர்கள், அரசு உத்தரவை கவனிக்காமல் திறந்த கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் இருவர் செல்லலாம் என்று கூறியும், அவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்துள்ளனர். இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு அமைச்சரவை முடிவுப்படி கடைகளை திறக்க எந்த தடையும் கிடையாது. மால், திரையரங்கம் மூடியிருக்க வேண்டும். மற்ற கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பின்னர், ஆட்சியர் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளார்.
ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தியுள்ள இந்நேரத்தில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. நகரப்பகுதியில் கடைகளுக்கு செல்கின்றனர். கடைக்கு வருபவர்களுக்கு சானிட்டைசர் வழங்காமலும், தனிமனித இடைவெளி கடைபிடிக்காமலும், முகக்கவசங்கள் அணியாமலும் இருப்பதாக எனக்கு தொலைபேசியில் பலரும் புகார் தெரிவித்தனர்.
நான் கடைகளுக்கு சென்று பார்த்தபோது சில கடைகள் எந்தவித விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் அவற்றை காற்றில் பறக்கவிட்டு கடைகள் நடத்தப்படுகிறது. இது சம்மந்தமாக வர்த்தக நிறுவனத்தின் தலைவர், வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர், சிறு, மற்றும் நடுத்தர வியாபார தலைவர்களை தொடர்பு கொண்டு அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடைகளை மூட நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளேன். அவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளனர்.
இன்று நிலைமை மாறியிருக்கிறது. புதுச்சேரியில் 2 பேர் கவரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தாலும், பக்கத்து மாவட்டமான கடலூரில் இன்று ஒரே நாளில் கோயம்பேட்டிலிருந்து திரும்பிய 107 பேருக்கும், விழுப்பரத்தில் 39 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கடலூர், விழுப்பரம் மாவட்டங்களையொட்டியுள்ள கன்னிக்கோயில், மதகடிப்பட்டு, காலாப்பட்டு, திருக்கனூர் உள்ளிட்ட புதுச்சேரியின் எல்லைப்பகுதிகளில் வெளி மாநில நபர்கள் நுழைய தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது புதுச்சேரி அரசுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
அண்டை மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் அரசு இரவு பகல் பாராமல் பாடுபட வேண்டிய கடமை இருக்கிறது. பொதுமக்கள் வெளியே நடமாடுவது அதிகரித்தள்ளதால் இது சம்மந்தமாக ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். மக்கள் கடுமையான விதிகளை போட்டால் தான் கடைபிடிக்கின்றனர். ஆகவே அதுசம்மந்தமாக பேரிடம் ஆணையத்தின் கூட்டத்தில் முடிவெடுக்க இருக்கிறோம்.
புதுச்சேரியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் உத்தரவுகளை கடைபிடிக்காமல் வெளியே வந்து அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் மனம் உறுத்தலாக இருக்கிறது. மத்திய அரசு கடைகள், தொழிற்சாலைகளை திறக்கலாம் என்று தெரிவித்தாலும் கூட அந்த விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்காவிட்டால் மாநில மக்களை பாதுகாப்பதற்கு ஏதுவாக இருக்காது. எனவே அனைவரும் ஒருங்கணைந்து புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டு இருக்கும் இச்சூழ்நிலையில் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.