ஓவரா பன்றீங்க மக்களே.. இனி பாதி நேரம்தான் கடை திறந்திருக்கும்.. நாராயணசாமி அதிரடி!
புதுச்சேரி: புதுச்சேரியில் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக இன்று முதல் பால் மற்றும் மருந்தகங்களை தவிர பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாய பொருட்களான இடுபொருட்கள், உரம் உள்ளிட்டவற்றை எடுத்து செல்லும் விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்துவதாக புகார்கள் வந்துள்ளது. விவசாயிகளுக்கு உரம், இடுபொருள் மற்றும் விளைந்த பொருட்களை எடுத்து செல்வது முக்கியமானதாகும். விவசாயிகள் அவற்றை கொண்டு செல்ல காவல்துறை கட்டுப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக வெளிமாநிலத்தில் இருந்து புதுவைக்கு விவசாயப் பொருட்கள் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை. கால்நடை தீவணம் கொண்டு செல்வதற்கும், அவற்றை விநியோகம் செய்யவும் எந்த தடையும் இல்லை. உரம், இடுபொருள் கடைகள் திறந்திருக்கும். விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் போலீசார் நடந்துகொள்ள வேண்டும்.
விவசாயிகளுக்குப் பாதிப்பு
வாழை, பூ போன்றவற்றை பயிர் செய்த விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வியாபாரிகள் மார்க்கெட் வரமுடியாத காரணத்தினால் அவற்றை குடோன்களில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன். கொரானோ வைரஸின் 2 வது கட்டத்தில் நாம் உள்ளோம். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் கொரோனாவில் அதிக உயிரிழப்பை சந்தித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்குள் இந்தியாவில் உயிரிழப்பு 40 ஐ தாண்டியுள்ளது. நாமும் அபாய கட்டத்தில் உள்ளோம். புதுவை மக்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும். பெரிய மார்க்கெட் பகுதியை பல இடங்களுக்கு மாற்றியுள்ளோம். இதனால் கூட்ட நெரிசல் பெரிய மார்க்கெட்டில் குறைந்துள்ளது. மக்கள் இடைவெளிவிட்டு காய்கறி வாங்கும் நிலை உருவாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரிய அளவில் இறைச்சி கடையில் கூட்டம் இருந்தது.
வரிசையில் போய் வாங்குங்க
இறைச்சி கடைகள் தினமும் திறந்திருக்க வேண்டும். மக்கள் வரிசையில நின்று அப்பொருட்களை வாங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நானும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும் இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டோம். அங்கு 3 வது மாடியில் கொரோனா சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை அங்கு தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரானோ தொற்று இருக்கிறதா என பரிசோதிக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. முதலில் வருபவர்கள் தர்மா மீட்டரில் பரிசோதனை செய்யப்பட்டு, சந்தேகப்பட்டால் தனி அறையில் பரிசோதனை செய்து, மாதிரி எடுத்து ஜிப்மருக்கு அனுப்பப்படுகிறது. பாதிப்பு இருந்தால் தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை புதுவையில் 1,083 பேர் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கண்காணிப்பில் 7 பேர்
7 பேர் மருத்துவமனை கண்காணிப்பு வார்டில் வைக்கப்பட்டுள்ளனர். அதில் ஜிப்மர் மருத்துவமனையில் 2 பேரும், அரசு மார்பக மருத்துவமனையில் 4 பேரும், பிம்ஸ் மருத்துவமனையில் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காரைக்காலில் 3 பேரும் மாகேவில் 463 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனத்தில் ஐதராபாத்தில் இருந்து வந்த 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் தற்போது நிலைமை கட்டுக்குள் வந்திருக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 200 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதிர்ச்சியை அளிக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று கொடுக்கும்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவர். புதுவையில் நாம் நாள் முழுவதும் கடைகளை திறந்திருப்பதால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் குறுக்கு வழியாக புதுச்சேரிக்குள் நுழைகின்றனர்.
வெளியில் திரியாதீங்க
நம் மாநில மக்களும் நினைத்த நேரத்தில் பொருட்களை வாங்குவதாக கூறி வெளியில் திரிகின்றனர். எனவே பால் மற்றும் மருந்தகங்களை தவிர மற்ற அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் பங்குகளும் அடங்கும். ஆன்லைனில் மளிகை பொருட்களை கேட்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் கொடுக்கப்படும். மக்கள் வெளியில் உலாவினால் கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
14 நாட்கள் உஷாரா இருங்க
இக்கட்டான காலகட்டமான அடுத்த 14 நாட்கள் நாம் உஷாராக இருக்க வேண்டும். மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். மாட்டு தீவனம் அதிக விலைக்கு விற்கின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறியை அதிக விலைக்கு விற்கும் சில்லறை வியாபாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முதலில் செலுத்தப்படும். இன்னும் 3 நாட்களுக்குள் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தேவைப்பட்டால் தனியார் மருத்துவ கல்லுரிகளையும் அரசு கையில் எடுத்து நோயாளிகளை பரிசோதிக்க பயன்படுத்திக்கொள்வோம் என்று கூறியுள்ளார்.