புதுவையில் கொரோனாவுக்கு முதியவர் பலி.. பாதிப்பு எண்ணிக்கை 157 ஆக உயர்வு
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 83 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். மேலும் இன்று ஒரே நாளில் 12 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்து நீண்ட காலமாக ஒற்றை இலக்க எண்ணில் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த ஒருமாதமாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகமாகி வருகிறது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. இன்றைய நிலவரப்படி புதுச்சேரியில் 157 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், புதுச்சேரியை சேர்ந்த 10 பேரும், வெளிநாட்டில் இருந்து மாகே திரும்பிய இருவரும் என மொத்தமாக 12 நபர்களுக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது என்றார். மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விழுப்புரத்தை சேர்ந்த 82 வயது முதியவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உயிரிழந்த நிலையில் நேற்று புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 83 வயது முதியவர் கொரோனாவிற்கு பலியானதாக தெரிவித்தார்.
மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட பிரிவில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
புதுவையில் கைதிக்கு கொரோனா.. கலக்கத்தில் போலீசார்