வளைகாப்புக்கு வந்தவர் கொரோனாவால் பலி.. சட்டவிரோதமாக புதுவை வருபவர்களால் வேகமெடுக்கும் கொரோனா
புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்னையில் இருந்து சட்டவிரோதமாக கொரோனா பாதிப்புடன் வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி. மேலும் வெளிமாநிலத்தில் இருந்து அனுமதியின்றி ரகசியமாக புதுச்சேரி வருபவர்களால் நாளுக்குள் நாள் அதிகரிக்கிறது கொரோனா.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, தற்போது மூன்று இலக்கத்தை தொட்டுள்ளது. குறிப்பாக வெளிமாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக புதுச்சேரிக்கு வருபவர்களால்தான் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஓட்டுநராக பணிபுரிபவர் தியாகராஜன். இவர் கடந்த மாதம் 24 ஆம் தேதி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் தனது மகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இதற்காக சென்னையிலிருந்து உறவினர்களான 75 வயது முதியவர் கலியபெருமாள், சாந்தாதேவி, கணேஷ்குமார், சிவசங்கரி ஆகியோர் வந்தனர்.
வளைகாப்பு முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பிய நிலையில், கலியபெருமாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொரோனா பீதியால் சென்னைக்கு பதில் புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெறலாம் என அவர்கள் திட்டமிட்டு மறுநாள் சென்னையிலிருந்து 25 ஆம் தேதி காரில் கலியபெருமாள், சாந்தாதேவி, சிவசங்கரி, கணேஷ்குமார் ஆகியோர் புதுச்சேரிக்கு மீண்டும் எந்த அனுமதியும் பெறாமல் வந்தனர்.
அப்போது புதுச்சேரி கோரிமேடு எல்லையில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, சென்னைக்கும் புதுச்சேரிக்கும் 2 நாட்களாக எந்தவித அனுமதியுமின்றி வந்து சென்றது தெரியவந்தது.
மேலும் ஒரு காரில் 2 பேருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது என்ற அரசு உத்தரவையும் மீறியிருந்ததையடுத்து 4 பேர் மற்றும் தடை உத்தரவை மீறி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்திய தியாகராஜன் உள்ளிட்ட 5 பேர் மீதும் கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த 5 பேருக்கும் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 5 பேரும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே இதில் 75 வயதான முதியவர் கலியபெருமாள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் புதுச்சேரியில் கொரோனா பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் காரைக்கால் மாவட்டம் நிரவி வள்ளுவர் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு, சென்னை மயிலாப்பூரில் இருந்து உறவினர்கள் 8 பேர் வந்திருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் விரைந்து சென்று, சென்னையில் இருந்து வந்த 8 பேரையும் தனிமைப்படுத்தி, அவர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்தனர்.
அதில் 56 வயது ஆண் மற்றும் அவரது 30 வயது மகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுடன் பழகிய நபர்கள் குறித்து சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர். சென்னையில் இருந்து வந்தவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா இல்லாத நாடு என்ற 24 நாள் சாதனை முடிவுக்கு வந்தது.. நியூசிலாந்தில் புதிதாக 2 பேருக்கு பாதிப்பு
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இன்று புதிதாக புதுச்சேரியை சேர்ந்த 12 பேருக்கும், காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் என 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 216 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 99 பேர் சிகிச்சையிலும், 113 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.