4 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு அமைச்சரின் செல்போனை திருடிய பட்டதாரி வாலிபர்.. போலீசில் வசமாக சிக்கினார்
புதுச்சேரி: நடைபயிற்சி சென்ற புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணனின் செல்போனை திருடிச்சென்ற சென்ற பட்டதாரி வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் கமலகண்ணன். இவர் கடந்த 2 ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டுவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்தார். அப்போது சுப்பையா சாலையில் செல்போனில் பேசியபடி நடந்து வந்துகொண்டிருந்த, அமைச்சர் கமலகண்ணனிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் செல்போனை திருடிச்சென்றனர்.
இச்சம்பவம் புதுச்சேரியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சரியில்லாததற்கு, அமைச்சரின் செல்போன் திருட்டே சான்று என ஆளும் காங்கிரஸ் அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.
இதனால் காவல்துறைக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து இவ்விகாரத்தில் டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா நேரடியாக தலையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினார். இதுகுறித்து ஒதியஞ்சாலை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அமைச்சரின் செல்போனை பறித்து சென்றது, முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (21), அனிதா நகரை சேர்ந்த டிப்ளமோ பட்டதாரியான பாலா என்கிற பாலமுருகன்(21) என்பதும், இருவரும் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது.
இதனிடையே தலைமறைவாக இருந்த செந்தில் மற்றும் பாலாவை தனிப்படை போலீசார் கடந்த இரு தினங்களாக தீவிரமாக தேடி வந்த நிலையில், விழுப்புரம் பகுதியில் தலைமறைவாக இருந்த பாலாவை ஒதியஞ்சாலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவனிடம் இருந்து கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தபட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் அமைச்சரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட பாலாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவத்தன்று செந்திலுடன் சேர்ந்து அமைச்சரிடம் செல்போனை திருடியதும், திருடிய செல்போனை மேல் திருக்காஞ்சியை சேர்ந்த தினேஷ் என்பவரிடம் 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததை ஒப்புகொண்டார். மேலும் செந்திலுடன் டிப்ளமோ படித்தபோது நண்பர்களான இருவரும் பல்வேறு திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள செந்திலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.