மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க ஆளுநர் தடையாக உள்ளார்..அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் புகார்!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளார் என மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு அமல்படுத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் 24 ம் தேதியே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மீன்பிடி தடைக்காலம் 82 நாட்களாக உயர்ந்தது. எனவே மீன்பிடி தடைக்காலத்தை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். இந்த கோரிக்கையை தமிழகமும், ஆந்திராவும் வலியுறுத்தினால் பரிசீலிப்பதாக தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழக, ஆந்திரா அரசுகளும் இதேபோன்ற கோரிக்கையை மத்திய அரசுக்கு வலியுறுத்தின.
இதன் காரணமாக மே 31 ஆம் தேதியுடன் தடைக்காலம் முடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே புதுச்சேரி மீனவர்கள் 1 ஆம் தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லலாம். அதேசமயம் மீனவர்கள் ஜூலை 15 தான் தடைக்காலம் முடியும் என படகுகள், வலைகளை சீரமைக்காமல் இருந்துவிட்டதாகவும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து வந்து அவைகளை சீரமைக்க உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனையடுத்து அழைத்து வருபவர்களின் விவரத்தை பெற்று மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து அவர்களுக்கு இபாஸ் பெற்றுத்தர உள்ளேன்.
தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் புதுச்சேரியில் இன்னும் நிவாரணத்தை வழங்க ஆளுநர் அனுமதி தராமல் உள்ளார். நிதி இருந்தும் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தை வழங்க முடியவில்லை.
அதுபோல் மீனவ சொசைட்டிகளில் உறுப்பினராக உள்ளவர்கள் ஆண்டுக்கு ரூ.1,500 சேமித்து வந்தால், அத்துடன் மத்திய அரசு 2 மடங்கு ரூ.3 ஆயிரம் சேர்த்து ரூ.4,500 ஆக வழங்கப்படும். இதில் மாநில அரசின் பங்கு ஏதும் இல்லை. அதேசமயம் மத்திய அரசு நிதியுதவியும் வழங்கிவிட்டது. ஆனாலும் இதுவரை அந்த நிதியையும் மீனவர்களுக்கு வழங்க முடியவில்லை.
புதுச்சேரியில் 7,943 மீனவர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். சமூக நலத்துறை மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மத்திய அரசின் பங்கு உள்ளது. ஆனால் மீன்வளத்துறை மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மத்திய அரசின் பங்கு இல்லை. இதனால் மத்திய அரசு 50 சதவீதம் பங்கு தர வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளேன். 27 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,500 மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகின்றது.
800 பேர் ஒரே நபருடன் ரேஷன் அட்டை வைத்துள்ளனர். அவர்களுக்கு தரமாட்டேன் என்று ஆளுநர் மறுத்து வருகின்றார். மீண்டும் அவர்களுக்கும் சேர்த்து மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கக்கோரி ஆளுநருக்கு கோப்பு அனுப்ப உள்ளேன் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.