புதுவையில் அதிகரிக்கும் கொரோனா... சமூகப் பரவலா? மக்கள் எச்சரிக்கையாக இருக்க சுகாதாரத்துறை வார்னிங்
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக தொடங்கிவிட்டதா? என சந்தேகம் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமென புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த புதுச்சேரியில் 4 வது கட்டமாக வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுச்சேரியை விட அருகில் உள்ள தமிழக பகுதியான கடலூர், விழுப்புரத்தில் தான் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
இதனிடையே கடந்த 4 நாட்களாக புதுவையிலும் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஆட்சியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் கனகசெட்டிகுளம், முள்ளோடை, மதகடிப்பட்டு, திருக்கனூர் உள்ளிட்ட புதுவை மாநில 4 எல்லைகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இது என்னடா புதுச்சேரிக்கு வந்த சோதனை- சரக்கு கடை திறந்தும் வாங்க வராத குடிமகன்கள்
அங்கு 24 மணிநேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இ-பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், முத்தியால்பேட்டை முத்தையா முதலியார் தெருவைச் சேர்ந்த 55 வயதுடைய நபருக்கும், ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகர் 5 வது குறுக்கு தெருவை சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தின் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 43 என்றும், தமிழகத்தை சேர்ந்த 6 பேரை சேர்த்தால் பாதிப்பு எண்ணிக்கை 49 என மோகன்குமார் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக தொடங்கிவிட்டதா? என சந்தேகம் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.