மிசோரம் எம்பிபிஎஸ் சீட்டில் கிரண்பேடி மோசடி.. கிரண்பேடி மீது புதுச்சேரி மல்லாடி ஷாக் புகார்!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக உள்ள கிரண்பேடி, மிசோரம் மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய போது தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய மகளுக்கு முறைகேடாக எம்பிபிஎஸ் இடம் பெற்று தந்ததாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் ஆரம்பம் முதலே மோதல் இருந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக கிரண்பேடிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், துணைநிலை ஆளுநர் மீது அடுக்கடுக்கான முறைகேடுகளை தெரிவித்துள்ளார்.
கிரண் பேடி மீது புகார்
அவர் கூறியுள்ள புகாரில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றவர்கள் மீது அடிக்கடி குறை கூறிவருகிறார். ஆனால் அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் முறைகேடுகள் கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் மறந்துள்ளார். 1994 ஆம் ஆண்டு அவருக்கு மகசேசே விருது வழங்கப்பட்டது. அந்த பரிசுத்தொகையை தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவேன் என்று தெரிவித்தார். ஆனால் அவர் சொன்னபடி கொடுக்கவில்லை.
மிசோமில் அவர் செய்த முறைகேடு
அதேபோன்று மிசோரம் மாநிலத்தில் கிரண்பேடி டிஐஜியாக பணியாற்றியபோது, மிசோரம் மாநில இடஒதுக்கீடானா மருத்துவ இடத்தினை தன்னுடைய மகளுக்கு பெற்று அந்த மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய இடத்தினை கிரண்பேடி பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அந்த இடத்தில் கூட அவரது மகள் படிக்காமல் பாதியிலேயே நின்றுவிட்டார். அந்த இடத்தினை வீணாக்கினார். மேலும் அமைச்சர், எம்எல்ஏக்கள் மீது அடிக்கடி முறைகேடு புகாரை தெரிவிக்கிறார்.
தீர்ப்பை கோர்ட் சொல்லட்டும்
இவர் மீதும் கடந்த காலங்களில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதற்காக அவர் குற்றவாளி ஆகிவிட்டாரா? தீர்ப்பினை நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும். ஆனால் இவர் பலரை நீதிபதியாக மாறி தவறு செய்துவிட்டதாக தெரிவித்து வருகிறார். இவர் சிறை கண்காணிப்பாளராக இருந்த போது வெளிநாட்டினரை அழைத்து வந்து காண்பித்தார். இது அப்போது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அவரை மிக முக்கியமான பதவிகளில் அமர்த்த கூடாது என்று அப்போது தெரிவித்தனர்.
எவ்வளவு செலவு
புதுச்சேரியில் கடந்த காலங்களில் கவர்னராக இருந்தவர்கள் எல்லாம் என்ன செலவு செய்தார்கள். நீங்கள் என்ன செலவு செய்து இருக்கிறீர்கள்? எத்தனை முறை விமானத்தில் பறந்தீர்கள்? எந்தெந்த அதிகாரிகளை எல்லாம் சந்தித்து புதுச்சேரிக்கு எவ்வளவு தொகை வாங்கி வந்து கொடுத்தீர்கள் என்பதை தெரிவிக்க முடியுமா? விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்துவிட்டு பிஸினஸ் கட்டணத்தில் தொகையை பெற்றது ஏன். அதை தொண்டுநிறுவனத்திற்க கொடுத்ததாக கூறினீர்கள். எப்போது கொடுத்தீர்கள்.
வரிப்பணத்தை வீணடிக்கிறார்
புதுச்சேரி மக்களுக்காக சேவை செய்ய வந்திருப்பதாக அடிக்கடி பெருமை பேசும் தாங்கள் சம்பளமாக புதுச்சேரி மக்களின் வரிப்பணம் 3 லட்சத்திற்கு மேல் வாங்குகிறீர்களே உண்மையிலேயே உங்களுக்கு சேவை மனப்பான்மை இருந்தால் பென்ஷன் தொகையை மட்டும் வாங்கிக்கொண்டிருக்கலாமே. எது உங்களை தடுத்தது. கடந்த 4 ஆண்டுகாலத்தில் நீங்கள் கவர்னர் மாளிகையில் உணவு, மருத்துவம், தன்னை விளம்பரப்படுத்திக்கொள்வது என எவ்வளவு தொகையை செலவு செய்திருக்கிறீர்கள் என வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
இப்படித்தான் அவர்கள் நடந்தார்களா
கடந்த காலங்களில் இருந்தவர்கள் இப்படித்தான் நடந்து கொண்டிருந்தனரா. அடிக்கடி ஆய்வுக்கு செல்பவர் கடந்த 38 நாட்களாக வெளியே எங்கும் பார்க்க முடியவில்லை. கேட்டால் மத்திய அரசின் உத்தரவை மதித்து நடப்பதாக கூறுகிறார். ஆனால் புதுச்சேரியில் 6 மணிமுதல் 1 மணிவரை சமூக இடைவெளியில் சென்று வரலாம் என்று நடைமுறை இருக்கிறது. அதன்படி ஒருமுறையேனும் தன்னுடைய விளம்பர குழுவை அழைக்காமல் தனியாக சென்று மக்கள் படும் துன்பங்களை கேட்டறிந்தது உண்டா. 2000 ரூபாய் நிவாணரம் மக்களுக்கு போய் சேர்ந்ததா என்பதை பார்த்தாரா? இவ்வாறு பல்வேறு கேள்விகளை மல்லாடி கிருஷ்ணாராவ் எழுப்பியுள்ளார். மேலும் இந்த கேள்விகள் அனைத்தையும் எழுத்துப்பூர்வமாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்.