குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம்.. கூடுகிறது புதுச்சேரி சட்டசபை
புதுச்சேரி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக புதுச்சேரி மாநிலத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் வருகின்ற 12 ஆம் தேதி கூடவுள்ளதாக சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் என தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முதலாவதாக கேரள மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று மேற்குவங்க மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சர் நாராயணசாமியை பொறுத்தவரை, புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சியே கவிழ்த்தாலும் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமுல்படுத்த மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக, புதுச்சேரி மாநிலத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார். மேலும் இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் மாநில அரசின் அனுமதியில்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றும் மத்திய அரசின் முடிவிற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
சுதான்னு கூப்பிட்டால் திரும்பி பார்க்கிறாள்.. ஆனா பேசல.. நம்பிக்கையுடன் காத்திருக்கும் அருண்!
ஆளும் காங்கிரஸ் அரசு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டினாலும், இந்த சிறப்பு கூட்டத்தில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக ஆளும் அரசுக்கு எதிராகவும், முதலமைச்சர் நாராயணசாமிக்கு எதிராகவும் ஊழல் குற்றச்சாட்டு கூறி போர்க்கொடி தூக்கியுள்ள, பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவின் விவகாரத்தை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிவதற்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்தும் எதிர்கட்சிகள் பிரச்சனைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். இதனால் இந்த சிறப்பு கூட்டமானது மிகுந்த பரபரப்படன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.