இலங்கை டூ புதுச்சேரிக்கு பயணிகள் கப்பல்.. 3 மணி நேர பயணம்.. ரூ. 7000 கட்டணம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், இதற்கான கட்டணம் ரூபாய் 7 ஆயிரம் வரை இருக்குமென மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணம் துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக புதுச்சேரி தலைமை செயலகத்தில் மத்திய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதுச்சேரி மாநில துறைமுகத்துறை அமைச்சர் கந்தசாமி, சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எம்பிக்கள் வைத்தியலிங்கம், கோகுலகிருஷ்ணன், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் மற்றும் இந்திய இலங்கை துறைமுகத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இலங்கையின் ஜாப்னா துறைமுக்திலிருந்து புதுச்சேரியின் காரைக்கால் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக ஆலோசிக்கப்பட்டு வந்த நிலையில், இன்னும் மூன்று மாதத்தில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
இதன் மூலம் ஆன்மீக பயணமா புதுச்சேரிக்கு இலங்கையிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். இதனால் சுற்றுலா மற்றும் தொழில்துறை வளர்ச்சிப் பெறும் என்றார். மேலும் பேசிய அவர், காரைக்காலில் இருந்து ஜாப்னாவிற்கு 3 மணி நேரத்தில் சென்றுவிட முடியும். இதற்கான கட்டணம் 7 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.