பிற மாநிலத்தவர் புதுவையில் நுழைய தடை.. எல்லையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்குள் வர முயன்ற வாகனங்களை புதுச்சேரி எல்லையில் தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் எல்லைகளில் பல கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி 216 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 246 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 80 வயது முதியவர் உயிரிழந்துள்ளதால், புதுச்சேரியில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் தொடக்கத்தில் கோரோனா எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று மூன்று இலக்கத்தை எட்டியுள்ளது. சென்னையில் இருந்து புதுவைக்கு மருத்துவம், திருமண விழா, துக்க நிகழ்ச்சிக்கு வருபவர்கள் மூலம் தான் கொரோனா அதிகம் பரவுவதால், இன்று முதல் இ-பாஸ் வைத்திருந்தாலும் கூட சென்னையில் இருந்து புதுவைக்கு வருபவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், அவ்வாறு வந்தால் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். கடலூர், விழுப்புரம், திண்டிவனம் பகுதியில் இருந்து வருபவர்கள் நீரிழிவு நோய், பிரசவம் போன்ற சிகிச்சைக்காக வரலாம். இதுதவிர வேறு எந்த காரணத்துக்காகவும் யாரையும் உள்ளே விடக்கூடாது என முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்குள் வர முயன்ற வாகனங்களை எல்லைகளில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும் மருத்துவம் பார்க்க வந்த வாகனங்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர். மேலும் மதகடிப்பட்டு, கன்னியகோவில், கனகசெட்டிகுளம், திருக்கனூர் உள்ளிட்ட புதுச்சேரி - தமிழக எல்லை பகுதிகள் வழியாக வெளிமாநிலத்தவர் வருவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எல்லை பகுதிகளில் பல கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
8 நாய்களை வரிசையாக நிற்க வைத்து... அட இப்டியெல்லாம் கூடவா கின்னஸ் சாதனை படைக்கலாம்!