நட்ட 2 மாதத்தில் கொத்து கொத்தாக கொய்யா காய்கள்.. வியக்க வைக்கும் புதுவை லட்சுமி!
Recommended Video
புதுச்சேரி: கொய்யா செடி நட்டதிலிருந்து இரண்டே மாதத்தில் கொய்யா காய்க்கும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளார் புதுச்சேரியைச் சேர்ந்த இளம்பெண் விவசாயி லட்சுமி.
வருடத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் அளவிற்கு மகசூலை தரும் கொய்யா ரகங்கள். புதுச்சேரியை சேர்ந்த அந்த இளம்பெண் விவசாயியை பற்றி தற்போது காணலாம்.
புதுச்சேரி மாநிலம் கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடபதி. இந்தியாவிலேயே முதலாவதாக, தோட்டக்கலை வல்லுநர் என்ற அடிப்படையில் பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர். விவசாயி வேங்கடபதி பூக்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளில் ஒட்டுமுறையில் பல்வேறு ரகங்களை கண்டு பிடித்துள்ளார்.
விறுவிறுன்னு தயாராகும் விநாயகர் சிலைகள்.. கன்னியாகுமரியில் கோலாகலமாக தயாராகும் கணேசர்கள்
சாதனை
மேலும் ஒட்டுண்ணி முறையில் கனகாம்பரம் செடிகளை உருவாக்கி சாதனையும் படைத்துள்ளார். இவரது மகள் ஸ்ரீலக்ஷ்மி. தந்தையை போன்றே இளம்வயதில் விவசாயத்தின் மீது உள்ள பற்றால் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றார். இவர் ஏற்கனவே காஷ்மீர், சிம்லா போன்ற மலைப்பிரதேசங்களில் மட்டும் விளையக்கூடிய ஆப்பிள் வகைகளை புதுச்சேரி மண்ணில் விளைவித்து சாதனை படைத்தார்.
புதிய முயற்சி
தற்போது கொய்யா வகைகளில் புதிய முயற்சியாக இரண்டே மாதத்தில் கொய்யா கனிகளை மகசூல் செய்யும் புதிய ரகத்தை உருவாக்கி சாதனை செய்துள்ளார். இந்த புதிய ரகத்தின் மூலம் ஒரு ஏக்கரில் வருடத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்ட முடியும்.
2 வருட சோதனை
இதற்காக கடந்த 2 வருடமாக சோதனையில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார் லஷ்மி. கொய்யாவில் புதிய ரகத்தை கண்டுபிடித்ததற்காக ஜெர்மனியை சார்ந்த இன்டர்நேஷனல் பீஸ் யூனிவர்சிட்டி (international peace university ) லஷ்மிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்து உள்ளது.
மண்கட்டு முறை
தன்னுடைய கண்டுபிடிப்பு குறித்து லஷ்மி கூறுகையில், செடிகளை ஒட்டுக்கட்டுமுறை, மண்கட்டுமுறை ஆகிய முறைகளில் மட்டுமே உருவாக்கபடுகின்றது. ஆனால் குளோனிங் முறை. அதாவது மெகா மைக்ரோ பிரபோகேசன் என்கிற முறையில், வளர்ந்த செடியின் நுனிமொட்டை எடுத்து செடிகளாக வளர்க்கும் முறையில் கொய்யா செடிகளை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து வளர்த்து பின்பு வயலில் நடவேண்டும்.
6 மாதத்திலேயே
இதனால் 2 மாதத்திலேயே செடிகளில் கனிகளை தரும் என்றும், 6 மாதத்திலேயே விவசாயிகளுக்கு முழுப்பலனை தரும் என்றும் தெரிவிக்கின்றார் லஷ்மி. அதாவது இயற்கை முறையில் மண்ணை பயன்படுத்தாமல், எரிமலை துகள்களை கொண்டு செடிகளை வளர்த்து, பின்பு அதனை வயலில் நடவேண்டும் என கூறும் அவர், இம்முறையிலான விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும், சொல்கிறார்.
ஏக்கருக்கு 10 லட்சம் லாபம்
உரிய முறையில் பயிரிட்டால் கொய்யாவில் ஏக்கருக்கு 10 லட்சம் வரை லாபம் ஈட்டமுடியும் என்றும் தெரிவிக்கிறார் லட்சுமி. விவசாயத்தால் லாபம் இல்லை என பலர் விவசாயத்தை விடும் நிலையில், விவசாயத்தால் லாபம் ஈட்ட முடியும் என புரியவைத்துள்ளார் இளம்பெண் விவசாயி.