புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று இல்லை... நிம்மதி அடைந்த குடும்பத்தினர்
புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு தொற்று இல்லை என முடிவு வெளியாகியுள்ளது.
இது நாராயணசாமியின் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களை நிம்மதி பெருமூச்சு விடவைத்துள்ளது.
முதலமைச்சர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் நாராயணசாமிக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உயிர் மீதான பயம் கொரோனா அச்சத்தால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் - வெறிச்சோடிய திருச்சி
புதுச்சேரியில் பரவல்
புதுச்சேரியில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையிலும் நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் முதலமைச்சர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இரண்டு நாட்கள் அலுவலகம் மூடப்பட்டு கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டது.
கொரோனா சோதனை
முதலமைச்சர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவருடன் பணியாற்றிய மற்ற ஊழியர்கள் மற்றும் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவு இன்று வெளியாகிய நிலையில் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கலக்கத்தில் இருந்த நாராயணசாமியின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் இப்போது நிம்மதி அடைந்துள்ளனர்.
வயது முதிர்வு
நாராயணசாமி 70 வயதை கடந்தவர் என்பதாலும், அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர் என்பதாலும் அவரை வெளியே செல்ல வேண்டாம் என அவரது குடும்பத்தினர் கோரி வருகின்றனர். முதலமைச்சராக இருந்துகொண்டு அப்படி இருப்பது ஏற்புடையதல்ல எனக் கூறிவிட்டு வழக்கமான பணிகளை அவர் கவனித்த வண்ணம் இருக்கிறார். மேலும், ஆலோசனைக் கூட்டங்களை நேரில் நடத்துவதை தவிர்த்து காணொலி மூலம் அதை நடத்துகிறார்.
கொரோனா டெஸ்ட்
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் மாதம் இறுதியில் அவர் இந்த சோதனையை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அப்போது அவருடன் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் கொரோனா சோதனை நடத்திக்கொண்டனர்.