கைகுட்டை மூலம் மாஸ்க் செய்து அசத்திய கிரண்பேடி... சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ
புதுச்சேரி: கொரோனாவிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கைக்குட்டையை பயன்படுத்தி எளிய முறையில், முகக்கவசம் தயாரிப்பது குறித்து புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
நோய் தொற்று
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் நோய் தொற்று எளிதாக பரவுகிறது. இதன் காரணமாக மருத்துவ பணியாளர்கள், முழு கவச உடை அணிந்துதான் கொரோனா நோயாளிகள் இருக்கும் அறைக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
உபகரணங்கள்
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் சந்தேகத்துக்குரியவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். இதனிடையே புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் கவச உடைகள்,
வெண்டிலேட்டர்கள், மாஸ்க், மருந்துகள் உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பதில் இல்லை
கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல்வேறு மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையால் தத்தளிக்கின்ற நிலையில், மத்திய அரசானது பேரிடர் நிதியில் இருந்து பல மாநிலங்களுக்கு நிதி வழங்கி உள்ளது. ஆனால் புதுச்சேரி மாநிலத்திற்கு இதுவரை தேவையான நிதி வழங்கவில்லை. இடைக்கால நிவாரணமாக ரூ.300 கோடி, மொத்தமாக ரூ.995 கோடி நிதி வழங்க வேண்டுமென இரண்டு முறை பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியும், இதுவரை மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
மாஸ்க் ரெடி
புதுச்சேரியில் முக கவசத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எளிய முறையில் முக கவசம் தயாரிப்பது குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் கைக்குட்டையை பயன்படுத்தி முக கவசம் தயாரித்துள்ளார். மேலும் எனக்கு தேவையான முக கவசத்தை நானே தயாரித்து கொண்டேன். இதற்காக மருந்தகம் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் கூறுகிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.