புதுச்சேரியில் கருணாநிதி சிலை... முட்டுக்கட்டை போடும் கிரண்பேடி
புதுச்சேரி: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை புதுச்சேரியில் நிறுவ அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளார் துணை நிலை ஆளுநர் கிரன்பேடி.
இதனால் புதுச்சேரியில் மீண்டும் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இதனிடையே உச்சநீதிமன்றம் சென்றாவது கருணாநிதியின் சிலையை புதுச்சேரியில் நிறுவ உறுதியாக உள்ளார் நாராயணசாமி.
கருணாநிதி சிலை
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் சிலை நிறுவப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி ஏற்கனவே அறிவித்திருப்பது அனைவரும் அறிந்த விவகாரம். இந்நிலையில் தனது அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் சிலை அமைக்கும் பணிகளை சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியுள்ளார் நாராயணசாமி.
பதில் இல்லை
இந்நிலையில் புதுச்சேரியில் ஜெயலலிதாவுக்கு சிலை நிறுவ அனுமதி அளிக்க வேண்டும் என அதிமுகவும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் அதற்கு முதல்வர் நாராயணசாமி அலுவலகத்தில் இருந்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த அதிமுகவினர் கருணாநிதி சிலைக்கு தடை வாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
நாராயணசாமி உறுதி
இதனிடையே பொதுவிடங்களில் சிலை அமைக்க தடைவிதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி கருணாநிதி சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் கிரன்பேடி. ஆனால், உச்சநீதிமன்றம் சென்றாவது கருணாநிதி சிலையை நிறுவ வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார் நாராயணசாமி.
ஸ்டாலின் பேச்சு
திமுக மீதான கிரண்பேடியின் திடீர் கோபம் பற்றி விசாரித்த போது, கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது புதுச்சேரியில் பரப்புரை செய்த மு.க.ஸ்டாலின் கிரண்பேடியை பற்றி விமர்சித்து பேசியது தான் காரணம் எனக் கூறப்பட்டது. அதற்கு முன்பு வரை திமுகவை பெரிதளவில் எதிர்க்காத கிரண்பேடி ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு பின்பு தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டாராம்.