விவசாயி.. இயற்கை விவசாயி.. பிரமிக்க வைக்கும் பெரியார் தோட்டம்.. சபாஷ் போடுங்க மக்களே!
Recommended Video
புதுச்சேரி: பிரமிக்க வைக்கிறார் சக்திவேல். இவர் செய்த செயல் மிக மிக பெரிய விஷயம்.. விவசாயத்தில் லாபம் ஈட்ட முடியாது என கருதி பாரம்பரிய விவசாய நிலத்தை அப்பா விற்றாலும், இயற்கை விவசாயம் மீது கொண்ட காதலால் ஆறரை ஏக்கர் நிலத்தை வாங்கி ஒருங்கிணைந்த முறையில் வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்து வெற்றி கண்ட விவசாயி மகன்.
புதுச்சேரி அருகே கட்டிடப் பொறியாளர் பணியை துறந்து வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்து வரும் சக்திவேலைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
புதுச்சேரி அருகே 24 கி.மீ தொலைவில் விழுப்புரம் மாவட்டம் பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது பெரியார் தோட்டம். இந்த தோட்டத்திற்கு உள்ளே செல்லும்போதே, அங்கு வீசும் மூலிகை வாசங்களும், பறவைகளின் சத்தங்களும், அமைதியான சூழலும், ஏதோ மலை பிரதேசத்தில் இருக்கும் அனுபவத்தை நமக்கு தருகிறது.
அமித்ஷாவுடன் அதிகாரப் போட்டி வெடித்தது- ராஜ்நாத்சிங்குக்கு 6 அமைச்சரவை குழுவில் இடம்!
பெரியார் தோட்டம்
ஆறரை ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த தோட்டத்திற்கு சொந்தக்காரர் சக்திவேல் என்ற கட்டிட ஒப்பந்தத்தார். தோட்டத்திற்கு சொந்தக்காரர் என்பதை காட்டிலும், அங்குள்ள மரம், செடி, கொடிகளின் காதலர் இவர் என்பதே பொருத்தமாக இருக்கும்.
கட்டுமானப் படிப்பு
51 வயது ஆகும் சக்திவேல் தனது ஆரம்ப காலத்தில் டிப்ளமோ கட்டிடக்கலை படித்துவிட்டு கட்டிட ஒப்பந்தத்தாரராக வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் இயற்கை விவசாயம் மீது கொண்ட காதலால் தனது கட்டிட ஒப்பந்தத்ததாரர் பணியை துறந்துவிட்டு, கடந்த 2008 ஆம் ஆண்டு பாக்கம் பகுதியில் ஆறரை ஏக்கர் பரப்பளவில் நிலம் ஒன்றை வாங்கி அதில் ஒருங்கிணைந்த முறையில் கடந்த 11 வருடங்களாக வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
தப்புக் கணக்கு
சக்திவேலுக்கு பூர்வீக நிலம் இருந்தும், விவசாயம் செய்தால் நஷ்டம் வரும் என கருதி, தான் விவசாயத்திற்கு வரக்கூடாது என்பதற்காக அந்த நிலத்தை அவருடைய அப்பா விற்றுவிட்டதாக கூறுகிறார் சக்திவேல். சக்திவேலின் அப்பா போட்ட கணக்கு தப்பு என்று நிரூபிக்கும் வகையில் தற்போது தான் செய்துவரும் ஒருங்கிணைந்த விவசாயத்தில் வெற்றி கண்டுள்ளார் சக்திவேல்.
மா பலா வாழை
தற்போது இவரது தோட்டத்தில் மா, பலா, வாழை, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை, மற்றும் மலை பிரதேசங்களில் மட்டுமே விலையக்கூடிய துரியன், லிச்சி, பேஷன் புரூட் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகளும், மிளகு, திப்பிலி என 300 மேற்பட்ட தாவர வகைகள் உள்ளன. இவற்றில் பல்வேறு தாவர வகைகளை புனே, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து அவற்றை வளர்க்கும் முறைகளை கற்று கொண்டு, அந்த தாவரங்களை தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார் சக்திவேல்.
முழுவதும் இயற்கை
தாவரங்களை வளர்ப்பதற்கு முழுவதுமாக இயற்கை உரங்களையே சக்திவேல் பயன்படுத்தி வருகிறார். மேலும் இவரது பண்ணை ஒருங்கிணைந்த பண்ணை என்பதால் இங்கு ஆடு, மாடு, கோழி, வாத்து உள்ளிட்டவற்றையும் வளர்த்து வருகிறார். இவற்றின் சானங்கள் அங்குள்ள தாவரங்களுக்கு உரமாக இடப்படுகின்றன. மேலும் பண்ணை குட்டை அமைத்து அதில் விரால், கெளுத்தி உள்ளிட்ட மீன்களையும் வளர்த்து வருகிறார்.
தேனீக்களும்
இதேபோல் இங்குள்ள தாவரங்களின் பூக்களின் மூலம் தேனீக்களையும் வளர்த்து வருகிறார். இவரது தோட்டத்தில் ரசாயன உரங்கள் இல்லாததாலும், எப்போதும் இதமான சூழல் நிலவுவதாலும் இங்கு மயில், முயல், பட்டாம்பூச்சி, வவ்வால், அணில் உள்ளிட்ட உயிரினங்களும் வந்து செல்வது தனி சிறப்பு. மேலும் இவரது தோட்டத்தில் கிடைக்கும் காய், கனி, பூ மற்றும் மூலிகை வகைகளை புதுச்சேரியில் நகரின் மையப் பகுதியில் நம்மாழ்வார் பெயரில் கடை வைத்து அவற்றை பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனையும் செய்து வருகிறார்.
சொல்லித் தருகிறார்
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த சக்திவேலின் இந்த பெரியார் தோட்டதை பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு இயற்கை விவசாயத்தில் இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று வியந்து செல்வது மட்டுமின்றி, இயற்கை விவசாய முறைகைளைப்பற்றி நுணுக்கங்களை கற்றுகொள்கின்றனர்.
விவசாய சுற்றுலா
மேலும் வரும் காலத்தில் இந்த தோட்டத்தை ஒரு விவசாயம் சார்ந்த சுற்றுலா தலமாக மாற்ற முயற்சித்து வருகிறார் சக்திவேல். லாப நோக்கத்திற்காக இல்லாமல், தான் சாப்பிடும் நல்ல உணவுகளும், நல்ல காற்றும் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற சக்திவேலின் உயரிய நோக்கம் பாராட்டுகுரியதே.