என் தந்தையின் மரணத்திற்குக் காரணமானவர்களை.. நான் மன்னித்து விட்டேன்.. ராகுல் காந்தி உருக்கம்!
புதுச்சேரி: என் தந்தை மரணம் தொடர்பாக எனக்கு யாரிடமும் கோபமும் வெறுப்பும் இல்லை, என் தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை மன்னித்துவிட்டேன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார்.
அப்போது கல்லூரி மாணவிகள் ஒவ்வொருவராக பல்வேறு கேள்விகள் ராகுல் காந்தியிடம் எழுப்பினார்கள். அதற்கு ராகுல்காந்தி விரிவாக பதிலளித்தார். ஒரு மாணவி ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ்காந்தியின் மரணம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ராகுல், நான் என் தந்தையை இழந்தேன் , அது எனக்கு ஒரு கடினமான நேரம் , தந்தையின் மரணம் எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. தந்தை இல்லாமல் நிறைய பேர் இருப்பீர்கள் . என்னுடைய வலி அவர்களுக்கு புரியும் . அதற்காக எனக்கு யாரிடமும் கோபமோ வெறுப்போ இல்லை. மேலும் அதற்கு காரணமானவர்களை நான் மன்னித்து விட்டேன் என ராகுல்காந்தி பதிலளித்தார்.