வீக்கென்ட் பார்ட்டிக்கு இடையே வந்த விருந்தாளி.. புதுச்சேரியில் மழை.. உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று காலை முதல் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால், வார விடுமுறையை கொண்டாடுவதற்காக புதுச்சேரி வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், ஆன்மீகப் பயணமாகவும் நாள்தோறும் ஆயிரகணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இதிலும் குறிப்பாக வார இறுதி நாட்களில் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருவது வழக்கம்.
பெங்களூரு, சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் பட்டாளம், வார இறுதி நாட்களில் புதுச்சேரிக்கு வந்து வீக்கெண்ட் பார்ட்டிகளில் கலந்துகொள்வார்கள். இந்த வாரம் புதுச்சேரிக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழை கூடுதல் மகிழ்ச்சியை தந்துள்ளதே என்றே கூறலாம்.
பொதுவாக ஏப்ரல், மே, ஜீன் ஆகிய மூன்று மாதங்கள் புதுச்சேரியில் கடுமையான வெயில் வாட்டிவதைக்கும். ஆனால் கடந்த சில நாட்களாகவே மே மாதம் போன்று அதிகப்படியான வெப்பம் பகல் நேரத்தில் காணப்படுகிறது. இதனால் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பகல் நேரத்தில் வெளியே எங்கும் செல்லாமல் விடுதி அறைகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
ஆனால் இன்று காலை முதல் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த திடீர் சாரல் மழையில் நனைந்தபடி கடற்கரை சாலை, பாரதி பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாக வார விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.