ஆகககா.. சத்தம் போடாமல் அக்கா மகனை தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளராக்கிய ரங்கசாமி!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல், அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி தனது சகோதரியின் மகனை அழைத்து வந்து திடீரென வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஒரு மக்களவை தொகுதிக்கான தேர்தலும், காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. மக்களவை தொகுதியை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் சபாநாயகர் வைத்தியலிங்கமும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் மருத்துவக் கல்லூரி அதிபரான கே.நாராயணசாமியும் போட்டியிடுகின்றனர். இவ்விரு வேட்பாளர்களும் கடந்த வெள்ளிக்கிழமை 22 ஆம் தேதி தங்களுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை முறையாக அறிவிக்காமல், அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி தனது மூத்த சகோதரியின் மகனான நெடுஞ்செழியனை தட்டாஞ்சாவடி தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இடமான கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்திற்கு திடீரென அழைத்து வந்தார்.
பின்னர், தேர்தல் நடத்தும் அதிகாரியான ஸ்மித்தாவிடம் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவை நெடுஞ்செழியன் தாக்கல் செய்தார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் முன்கூட்டியே வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் நேரடியாக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வேட்பு மனு தாக்கலின்போது சொத்து குவிப்பு வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்தனும் உடனிருந்தார்.
மேலும், இன்றைய தினம் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ்- திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடேசனும், நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை செயலாளர் கவுரியும் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஸ்மித்தாவிடம் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.