நாங்களும் குடிப்போம்ல.. சீல் வைத்த கடைக்குள் புகுந்து மதுவை ருசித்த எலிகள்.. செம சேட்ட!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கால் சீல் வைக்கப்படிருந்த மதுபானக்குள் எலிகள் புகுந்து, அங்கிருந்த ஒயின் பாக்கெட்டுகளை கிழித்து ருசிபார்த்த சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
மதுவுக்கு பெயர்பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 450 க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் உள்ளன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேலாக மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் பூட்டப்பட்ட கடைகளில் இருந்து மதுபானங்கள் எடுக்கப்பட்டு, கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்ததையடுத்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அறிவுறுத்தலின்பேரில், கலால்துறையினர் அனைத்து மதுபான கடைகளுக்கும் சீல் வைத்தனர்.
டாஸ்மாக் டோக்கனை ஜெராக்ஸ் எடுத்த குடிகாரர்கள்.. 200 ரூபாய்க்கு விற்பனை.. 16 பேர் கைது
கடைகளில் சரக்கு இருப்பு
தொடர்ந்து மதுபான கடைகளின் இருப்பும் கணக்கிடப்பட்டது. இதனால் மதுபான விற்பனையாளர்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்தனர். பல மதுபான கடை உரிமையாளர்களால் உடனடியாக கணக்கு காட்ட முடியவில்லை. இருப்பினும் இருப்பை சரிவர காட்டாத மதுபான கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
உரிமம் ரத்து
அதுமட்டுமல்லாமல் 100 க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளின் உரிமங்கள் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மது கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தாசில்தார் மற்றும் போலீசார் என 8 க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மதுபானக் கடைகளில் உள்ள மதுபானங்களின் இருப்பு குறித்து கலால்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
பயங்கர துர்நாற்றம்
இதனிடையே மறைமலையடிகள் சாலையில் உள்ள மதுபானக்கடை ஒன்றிற்கு சென்ற கலால் துறையினர், அங்குள்ள இருப்பு குறித்து கணக்கெடுப்பு செய்துகொண்டிருந்தனர். அப்போது மதுக்கடையில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இதையடுத்து கடை முழுவதும் சோதனை செய்தபோது, அங்கு அதிகளவில் மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டு கிடந்தன. மேலும் அங்கிருந்த ஒயின் பாக்கெட்டுகளும் கிழிந்து கிடந்தன. பின்னர் அதிகாரிகள் மதுபானக் கடைக்கு பின்புறம் சென்று பார்த்தபோது, எலிகள் கூட்டம் கூட்டமாக ஒயின் பாக்கெட்டை கிழித்து குடித்துகொண்டிருந்தன.
எலிக் கூட்டம்
இதனால் மதுபானங்களின் இருப்பு குறித்து கணக்கெடுக்க முடியாமல் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மனிதர்கள் மதுபாட்டிகளை திருடியிருந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யலாம், எலிகள் மீது எவ்வாறு வழக்குப்பதிவு செய்வதென அதிகாரிகள் புலம்பி வருகின்றனர். இதனிடையே புதுச்சேரி மாநில அரசின் நிதி பற்றாக்குறையை போக்க, தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மதுக்கடைகளை திறப்பது குறித்து வரும் திங்கட்கிழமை அமைச்சரை கூடி முடிவு செய்யும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.