புதுவையில் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 5 ஆம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகளை முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். அதன்படி ஜுன் 8 ந்தேதி முதல் அனைத்து வழிபாட்டு தளங்களும் திறக்கப்படும், நாளை முதல் கடற்கரை உள்ளிட்ட பூங்காக்கள் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மருத்துவருக்கும் கொரோனா.. வளைகாப்பு நடத்தப்பட்ட பெண்ணுக்கும் பாதிப்பு
மத்திய அரசு 5 வது முறையாக நீட்டித்துள்ள பொது முடக்கத்தில் மாநில அரசுகளே பல்வேறு விஷயங்களில், தளர்வுகளை வழங்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் நீட்டிக்கப்பட்ட பொதுமுடக்கத்தில் இருந்து, தளர்வுகள் கொண்டுவர முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசு வழிகாட்டுதல் படி வரும் 8 ந்தேதி முதல் அனைத்து மத வழிபாட்டு தளங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்கபடும்.
நாளை முதல் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவு விடுதிகள் இரவு 9 மணி வரை சமூக இடைவெளியுடன் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும். நாளை முதல் அனைத்து கடற்கரைகள் உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்.
மதுக்கடைகளை பொறுத்தவரை இரவு 7 மணி வரை மட்டுமே செயல்படும் என்பதில் மாற்றம் இல்லை. திரையரங்குகள், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், கூட்ட அரங்குகள், அமர்ந்து சாப்பிடக்கூடிய மதுபான விடுதிகள் திறக்க விதிக்கப்படிருந்த தடைகள் தொடரும்.
மேலும் பேருந்து போக்குவரத்தை பொருத்தவறை மாநிலத்திற்குள் இயக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழக பேருந்துகள் புதுச்சேரியில் இருந்து இயக்கவோ, அல்லது புதுச்சேரி வழியாக செல்வது குறித்து தமிழக அரசுடன் பேசி முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.