முதன்முறையாக பள்ளி வாசல்களில் தேசிய கொடி.. அனைவரும் இந்தியர்கள்.. உறுதிமொழியேற்ற இஸ்லாமியர்கள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் முதன்முறையாக பள்ளிவாசல்களில் தேசியக்கொடியை ஏற்றி இஸ்லாமிய பெருமக்கள் குடியரசு தின விழாவை கொண்டாடினர்.
நாடு முழுவதும் குடியரசு தின விழா வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் புதுச்சேரியில் முதன்முறையாக அனைத்து பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள், தேசிய கொடியை ஏற்றிவைத்து குடியரசு தின விழாவை கொண்டாடியுள்ளனர். முல்லா வீதியில் உள்ள மீரா பள்ளிவாசலில் நடைபெற்ற குடியரசுத் தின விழாவில், தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது, நாம் அனைவரும் இந்தியர். இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் இந்தியர்கள் என இஸ்லாமியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு, எதிராக நாடுமுழுவதும் இஸ்லாமியர்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் பல்வேறுகட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வந்த பிறகு பள்ளிவாசல்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு குடியரசு தின விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.