ஒளிமயம்... வண்ண மயம்... கொள்ளையழகு.. புதுவையில் குடியரசு தின கோலாகல கொண்டாட்டம்!
புதுச்சேரி: குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
நாட்டின் 70 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதுச்சேரி சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை, தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு துறை அலுவலகங்களில் கண்கவர் வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை புதுவை வண்ண விளக்குகளால் அனைவரையும் கவர்ந்தது.
பாரதி பூங்கா தாவரவியல் பூங்கா மற்றும் நகரிலுள்ள தலைவர்கள் சிலைகளும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள காட்சிகள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் வண்ண மின் விளக்குகளுக்கு முன்பாக நின்று செல்பியும் எடுத்து செல்கின்றனர்.
கெளரவிக்கும் விழா
நாட்டின் 70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் கம்பன் கலையரங்கில் சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் பங்கேற்றனர்.
முதல்வர் நாராயணசாமி
முதலமைச்சர் நாராயணசாமி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து அவர்களை கௌரவித்து பேசுகையில், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்குவது தொடர்பான கோப்புகளை பலமுறை அனுப்பியும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதற்கு ஒப்புதல் தரவில்லை என்றும், இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் சுதந்திரபோரட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.
அரசு விழா
முன்னதாக 70 வது குடியரசு தினம் இன்று புதுச்சேரி அரசு சார்பில் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசார், தேசிய மாணவர் படை மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு அரசு துறையில் செயல்பாடுகளை விளக்கும் வகையில் அலங்கார வாகன அணிவகுப்புகள் நடைபெற்றது.
கிரண்பேடி பாராட்டு
விழாவில் மாநில முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், துணை சபாநாயகர் சிவகொழுந்து, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர், துறை செயலர்கள், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ரசித்தனர். முன்னதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது குடியரசு தின விழா உரையில், கஜா புயலின்போது புதுச்சேரி அரசு எடுத்த நடவடிக்கையை பாராட்டுகின்றேன் என்றும், கஜா புயலின்போது அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன என தெரிவித்திருந்தார்.
இணக்கமான உறவு
மேலும் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தி மக்கள் நலனை மையமாக கொண்ட சிறந்த ஆட்சியை வழங்குவதே புதுச்சேரி அரசின் நோக்கம் என்றும், அந்த அடிப்படையில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது எனவும் குறிப்பிட்டார். இதேபோல் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இனக்கமான உறவே நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.