ஏர்போர்ட்டுக்குப் பின்னாடி ஸ்கெட்ச் போட்ட ரவுடிகள்.. சுத்தி வளைத்த புதுச்சேரி போலீஸ்!
புதுச்சேரி: புதுச்சேரியில் எதிரிகளை கொலை செய்வதற்காக விமானம் நிலையம் பின்புறம் பதுங்கியிருந்த 8 ரவுடிகளை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி லாஸ்பேட்டை மற்றும் கருவடிக்குப்பம் பகுதியில் ஜெகன் மற்றும் பொடி மாஸ் தலைமையில் இரு ரவுடி கோஷ்டிகள் செயல்பட்டு வருகிறது. இதில் ரவுடி பொடி மாஸ் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஜெகன், ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் வெளியே இருக்கும் ரவுடி ஜெகன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கொலை செய்ய எதிரிகள் திட்டம் தீட்டி இருப்பதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் இதற்காக லாஸ்பேட்டை விமான நிலையம் பின்புறம் பகுதியில் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, அங்கு பதுங்கியிருந்த கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் ரவுடி பொடி மாஸின் ஆதரவாளர்களான மண்ட ரவி, பெருமாள், வினோத், ஜெயநாதன், சுபாஷ், மாற்றான், அருண் ஆகியோர் என்பதும், சிறையில் இருக்கும் பொடி மாஸ் உத்தரவுபடி, தங்களது எதிரியான ஜெகனை கொலை செய்ய திட்டம் போட்டு இருப்பதும் தெரியவந்தது.
மேலும் கைது செய்யப்பட்ட ரவுடி கும்பலிடமிருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் அண்மைக்காலமாக ரவுடிகள் சிறையில் இருந்துகொண்டே தங்களது எதிரிகளை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டி, வெளியில் இருக்கும் தங்களது ஆதரவாளர்கள் மூலம் வெடிகுண்டு வீசி எதிரிகளை கொலை செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ரவுடிகள் சிறையில் இருந்துகொண்டே செல்போன் மூலம் தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி பணம் பரிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளது.