அடக் கொடுமையே.. ரவுடியிடம் சரமாரியாக அடி வாங்கிய போலீஸ்காரர்.. வைரல் வீடியோ
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் கடைகளில் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்ட ரவுடியை பிடிக்கச் சென்ற போலீசாரை ரவுடி தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே வில்லியனூர் பகுதியில் ரவுடிகள் சிலர் தொடர்ச்சியாக அங்குள்ள கடைகளில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.
இந்நிலையில் நேற்று மதியம் அங்கு சிவா என்பவரது மளிகை கடையில் அதே பகுதியை சேர்ந்த ரவுடி சாந்தமூர்த்தி மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வில்லியனூர் காவல் நிலைய போலீசார் இருவர், தகராறில் ஈடுபட்ட ரவுடியை பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அந்த ரவுடி போலீசாரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமின்றி, கொலை மிரட்டல் விடுத்து அவர்களை தாக்கியும் உள்ளார்.
ரவுடி போலீசாரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது போலீசாரை ரவுடிகள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதனிடையே வியாபாரிகளுக்கு பாதுகாப்பு கேட்டும், சம்பந்தப்பட்ட ரவுடியை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியும் வில்லியனூர் பகுதியில் உள்ள வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.