புதுச்சேரி.. நடு ரோட்டில் போலீஸாரை சரமாரியாக தாக்கிய ரவுடிகள்.. கட்டிப் புரண்டு சண்டை!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் ரவுடியை பிடிக்க முயன்ற போலீசாரை, நடுரோட்டில் தள்ளி தாக்குதல் நடத்தி, ரோட்டில் கட்டி புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே கரிக்கலாம்பக்கம் கிராமத்தை சேர்ந்தவன் ரவுடி ஜோசப். இவன் மீது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜோசப் தடையை மீறி ஊருக்குள் வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த கரிக்கலாம்பாக்கம் காவல்நிலைய போலீசார் சிவகுரு, மைக்கேல் ஆகியோர் உடனே அங்கு சென்றனர். அப்போது கரிக்கலாம்பாக்கம் மெயின் ரோட்டில் ஜோசப் நின்று கொண்டிருந்தார்.
உடனே போலீசார் அவனிடம் 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதால் ஊருக்குள் இருக்கக்கூடாது என்று கூறினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரவுடி ஜோசப் போலீஸ் சிவகுரு மீது சரமாரியாக தாக்கினார். அப்போது தடுக்க வந்த மற்றொரு போலீசான மைக்கேலை ஜோசப்பின் தம்பி தமிழ் பிடித்துக் கொண்டார். இதனால் அவருக்கும் அடிவிழுந்தது.
ஒருகட்டத்தில் போலீசார் இருவரையும் ரவுடிகள் நடுரோட்டில் தள்ளிவிட்டு கட்டிபுரண்டு சண்டை போட்டுகொண்டனர். இதையடுத்து ஜோசப்பும், அவனது தம்பி தமிழும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த போலீசார் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தப்பியோடிய ரவுடிகள் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
போலீசாரை தாக்கிய ரவுடி ஜோசப் சிதம்பரம் பெட்ரோல் பங்க் ஊழியரை கத்தியால் வெட்டி பணத்தை பறித்த முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவே தமிழக போலீசார் கையில் ரவுடிகள் சிக்கியிருந்தால் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை, கால்களில் மாவுகட்டு போடப்பட்டிருக்கும். ரவுடிகளுக்கும் பயம் ஏற்பட்டிருக்கும். ஆனால் புதுச்சேரி போலீசார் மீது ரவுடிகளுக்கு சிறிதளவு கூட பயம் இல்லை. புதுச்சேரியில் போலீசாரை பொது இடத்தில் வைத்து ரவுடிகள் தாக்கும் சம்பவம்தான் அண்மை காலமாக அரங்கேறி வருகிறது.