நகருக்கு நடுவே முதல்வர் படத்துடன் மாஸ் பேனர்... புதுச்சேரியில் தாதா அடாவடி
புதுச்சேரி: சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதி ஒருவர், காங்கிரஸ் பிரமுகர் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பொதுஇடத்தில் பெரிய பிளக்ஸ் பேனர் வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரபாக பேசப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்களின் புகைப்படங்களுடன் நகரின் மையப் பகுதியில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவடி மர்டர் மணிகண்டன். பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்.
ரவுடி வைத்துள்ள பேனர்
இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆயுள் தண்டனை கைதியாக காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் தண்டனை பெற்று வருகிறார். இந்நிலையில் ரவுடி மர்டர் மணிகண்டன், காங்கிரஸ் பிரமுகர் ஜேம்ஸ் என்பவரின் பிறந்த நாளுக்காக, நகரின் மையப் பகுதியான அண்ணா சாலையில் பேனர் வைத்துள்ளார்.
பேனரில் முதல்வர் படம்
அந்த பேனரில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் இருந்தும் நகராட்சியில் அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கேள்விகுறி
சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதி ஒருவர், காங்கிரஸ் பிரமுகரின் பிறந்த நாளுக்கு முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின் படங்களை இடம்பெறச் செய்து பிறந்த நாள் வாழ்த்து பேனர் வைத்திருப்பது பொதுமக்களின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கி உள்ளது.
முதல்வர் செல்லும் பாதை
இத்தனைக்கும் முதலமைச்சர் நாராயணசாமி தனது நெல்லித்தோப்பு தொகுதிக்கு நாள்தோறும் அந்தவழியாக பலமுறை சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.