சினிமா ஹீரோ போல் வந்த புதுவை ரவுடி.. தர்பார் பாடலுடன் டிக் டாக் வீடியோ!
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு வந்த பிரபல ரவுடி சோழன் கூளிங் கிளாஸ் மற்றும் ஷீ அணிந்துகொண்டு ஹீரோ போன்று வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சோழன். இவர் புதுச்சேரி மாநில பாஜக வர்த்தக அணி தலைவராக இருந்துள்ளார். லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் டாப் 10 ரவுடிகளின் பட்டியலில் சோழன் பெயர் உள்ளது.
ரவுடி சோழன் மீது காலாப்பட்டு சந்திரசேகர் கொலை வழக்கு, முத்தியால்பேட்டை அன்பு ரஜினி கொலை என கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. தற்போது கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் சோழன் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொலை வழக்கு விசாரணைக்காக சிறையிலிருந்து சோழன், புதுச்சேரி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது கண்ணில் கூலிங் கிளாஸ், காலில் ஷீ அணிந்துகொண்டு சினிமா பட ஹீரோ போன்று நீதிமன்றத்தில் இருந்த தனது ஆதரவாளர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டபடி நடந்து வந்தார். இதனை அவரது ஆதரவாளர் ஒருவர் வீடியோ எடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் பாடலை ஒப்பிட்டு டிக் டாக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சமீப காலமாக காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள கைதிகளிடம் செல்போன்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வசாதாரணமாக புழக்கத்தில் உள்ளதாக தொடர்ந்து குற்றம்சாட்டுகள் எழுந்து வருகிறது. மேலும் சிறையில் பணியில் உள்ள சிறைக்காவலர்கள் ஆயிரம் ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு கைதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், பிரபல ரவுடி சோழன் கூளிங் கிளாஸ் மற்றும் ஷீ அணிந்து கொண்டு நீதிமன்றத்திற்கு வந்த சம்பவம் காவல்துறை உயரதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே நேற்றைய தினம் காலாப்பட்டு மத்திய சிறையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கைதிகள் அறையில் இருந்து 11 செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.