அன்று அருண்.. நேற்று ஆறுமுகம்.. பழிக்குப் பழி.. தலைக்குத் தலை.. எப்படா அரிவாளை கீழே போடுவீங்க!
புதுச்சேரி: புதுச்சேரியில் பழிக்குப் பழியாக ஒரு ரவுடி சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ஜீவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (25). இவரது முதன்மையான தகுதியே ரவுடிதான். ஏரியாவை ஆட்டிப்படைத்து வந்த ரவுடிகளில் இவரும் ஒருவராம்.
இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அருண் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருந்தார். இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி இரவு குறிஞ்சி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தனியாக சென்று கொண்டிருந்தார் ஆறுமுகம்.
அப்போது ஆறுமுகத்தை பின் தொடர்ந்து வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு சராமாரியாக ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
இக்கொலை சம்பவம் குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடி கும்பலை தேடி வந்திருந்த நிலையில், அருண் கொலைக்கு பழிக்கு பழியாக அருணின் நண்பர்கள் சபதம் எடுத்து ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து தமிழக பகுதியான மொரட்டாண்டியில் மறைந்திருந்த விக்கி, அக்ஷய், சுரேஷ், சக்தி, ரகு, அருண், ராஜ்விக்னேஷ், சந்தோஷ்குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் கத்திகளை பறிமுதல் செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
அவன் கொலைக்குப் பழி வாங்க இவன்.. இவன் கொலைக்குப் பழி வாங்க அவன்.. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த பழிவாங்கும் படலங்கள் தொடர் கதை போல தொடருமோ.. கீழே போடுங்கப்பா அரிவாள்களை.. அறிவை வைத்து உருப்படும் வழியைப் பாருங்க.