புதுச்சேரி வரலாற்றிலேயே முதல் முறையாக.. போலீஸைத் தாக்கிய ரவுடிக்கு கால் முறிந்தது!!!
புதுச்சேரி: புதுச்சேரியில் போலீசாரை தாக்கிய ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். அதை விட முக்கியமாக, காவலர்களைத் தாக்கிய ரவுடி ஜோசப்பின் வலது கை, இடது கால் முறிந்துள்ளது. தமிழக ஸ்டைலில் புதுச்சேரியில் ரவுடி ஒருவருக்கு கால் கை முறிந்திருப்பது இதுவே முதல் முறை என்பது நினைவிருக்கலாம்.
நேற்று இரவு புதுச்சேரி அருகே கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் ரவுடி ஜோசப் என்பவன் 144 தடை உத்தரவை மீறி ஊருக்குள் நுழைந்ததை அறிந்த கரிக்கலாம்பாக்கம் காவல்நிலை போலீசார் சிவகுரு, மைக்கேல் ஆகிய இருவர் அவனிடம் விசாரணை நடத்த சென்றபோது, போலீசார் இருவரையும் ரவுடி ஜோசப்பும், அவனது தம்பியும் சேர்ந்து நடுரோட்டில் கீழே தள்ளிவிட்டு கடுமையாக தாக்கினர். பொதுமக்கள் மத்தியில் ரவுடிகள் போலீசை தாக்கிய சம்பவம் காவல்துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் குற்றவாளிகளை அதிரடிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், ரவுடி ஜோசப் புதுச்சேரி அருகே தமிழக பகுதியான கண்டமங்கலம் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடிப்படை போலீசார் மற்றும் வில்லியனூர் குற்றப்பிரிவு போலீசாரும் இணைந்து அங்கு சென்றனர்.
அப்போது கண்டமங்கலத்தை அடுத்த ஆலமரத்துகுப்பம் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் ஜோசப் பதுங்கி இருப்பதை கண்டனர். அவன் போலீசார் வருவதை கண்டவுடன் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவனை போலீசார் விரட்டி சென்று பிடிக்க முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து வலது கை மற்றும் இடது கால் முறிந்துபோனது. உடனே போலீசார் அவனை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தலைமறைவாக உள்ள ரவுடி ஜோசப்பின் தம்பியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுபோல் புதுச்சேரியில் உள்ள அனைத்து ரவுடிகளையும் கை, கால் முறியும் அளவிற்கு புதுச்சேரி போலீசார் துரத்திப் பிடிக்க வேண்டும் என்பதே புதுச்சேரி மக்களின் நெடுநாள் கோரிக்கை என மக்கள் சமூக வலைதளங்களில் ரவுடி ஜோசப்பின் கை, கால் உடைந்த போட்டோவை பதிவு செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த போலீசாரை புதுச்சேரி மாநில டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவா, ஜ.ஜி. சுரேந்தர் சிங் யாதவ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.