3 நேரமும் உணவளிக்கும் புதுச்சேரி கலெக்டருக்கு நன்றி.. ரஷ்ய நாட்டவரின் நெகிழ்ச்சி வீடியோ!
புதுச்சேரி: ஊரடங்கு உத்தரவால் உணவகங்கள் இல்லாத நிலையில் 15 நாட்களுக்கும் மேலாக தனக்கு உணவு வழங்கி வரும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு, ரஷ்ய நாட்டவர் தமிழில் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகிவருகின்றது.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையொட்டி மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. அதன்படி புதுச்சேரி அரசு ஊரடங்கை பிறப்பித்து கடந்த மார்ச் 30 தேதி முதல், மாநில பேரிடர் நிதியை பயன்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் தினமும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீடில்லாத ஆதரவற்றோருக்கு மூன்று வேளையும், தன்னார்வலர்கள் மூலம் உணவு வழங்கி வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரிக்கு ரஷ்யாவில் இருந்து சுற்றுலா வந்த வாடிம் போகஸ்ரோவ் என்பவர், மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்த நிலையில் தனது நாட்டிற்கு திரும்பி செல்ல முடியாமல் புதுச்சேரியில் சிக்கிக் கொண்டார். பின்னர் ரஷ்ய தூதரகத்தின் வேண்டுகோளின்படி அவர் புதுச்சேரி ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நபருக்கு கடந்த 23 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்த நாள் முதல் மாவட்ட ஆட்சியர் அருண்னின், அறிவுறுத்தலின்படி தன்னார்வலர்கள் தினமும் 3 வேலையும் உணவு வழங்கி வருகிறார்கள். அதன்படி இன்று வாடிம் போகஸ்ரோவ், தனக்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக உணவு வழங்கி வரும் மாவட்ட நிர்வாகத்தை நிர்வாகத்திற்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் உணவகங்கள் ஏதும் இல்லாத நிலையில் மாவட்ட நிர்வாகம் வழங்கும் உணவால், தான் உயிர் வாழ்வதாக தமிழில் நன்றி தெரிவித்து உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகின்றது.