வாங்க டீச்சர்.. நாங்க படிக்கணும்.. போராடி ஆசிரியரை வரவழைத்த சபாஷ் மாணவிகள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் கணக்குப் பாடம் நடத்த ஆசிரியர் இல்லாமல் தவித்த அரசுப் பள்ளி மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களுக்குப் பாடம் நடத்த ஆசிரியை அனுப்பப்பட்டார். அந்த ஆசிரியையை கைதட்டி வரவேற்று மாணவிகள் அழைத்துச் சென்றது நெகிழ வைப்பதாக இருந்தது.
புதுச்சேரி லப்போர்த் வீதியில் திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளிலேயே திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இடம் கிடைப்பது அரிது. நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமே இப்பள்ளியில் சேர முடியும்.
அப்படிப்பட்ட தனியார் பள்ளி பள்ளிகளுக்கு இணையாக இந்த அரசு மேல்நிலைப் பள்ளியின் கல்வித்தரம் சிறந்து விளங்குகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மேல்நிலை வகுப்புகளான பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லை என கூறப்படுகிறது. மேலும் குறிப்பாக கணித பாடம் நடத்த கடந்த இரண்டு மாதமாக ஆசிரியர் யாரும் பள்ளிக்கு வரவில்லை. பாடமும் நடத்தவில்லை என கூறப்படுகிறது.
பரீட்சை நெருங்குகிறது
இந்நிலையில் மாதாந்திர தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் இயற்பியல், கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. மாணவிகள் தலைமை ஆசிரியை மூலம் பலமுறை கல்வித்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இதுவரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
மாணவிகள் போராட்டம்
இந்நிலையில் ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்தும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகள் 500 க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து பள்ளியின் முன்பு உள்ள சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்தின் போது தலைமை ஆசிரியர் எவ்வளவு எடுத்துக்கூறியும் மாணவிகள் அந்த இடத்தை விட்டு அகலவில்லை.
டீச்சர் வந்தார்
இதுகுறித்து தகவல் அறிந்த கல்வித்துறை உடனடியாக வேறு பள்ளியில் பணியாற்றி வந்த கணித ஆசிரியை அங்கு தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த கணித ஆசிரியை பள்ளிக்கு வந்த பின்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கைதட்டி ஆரவாரமிட்டு கணித ஆசிரியையுடன் மீண்டும் வகுப்புக்கு சென்றார்கள். கணித ஆசிரியையும் வகுப்புக்கு சென்று பாடம் நடத்தினார்.
மகிழ்ச்சியுடன் வரவேற்பு
கல்வித்துறை இந்த ஆசிரியையை தொடர்ந்து நிரந்தரமாக இப்பள்ளியிலேயே பணியாற்ற உத்தரவிட வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மாணவிகள் தெரிவித்தனர். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து நடந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அரசு மீது பெற்றோர்கள் கோபம்
போராட்டம் நடத்தி பாடம் நடத்த பள்ளிக்கு ஆசிரியரை வரவழைத்த மாணவிகள் போராட்டம் பள்ளிக்கல்வித்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதேசமயம், படிப்புக்காக இப்படி வீதிக்கு வந்து போராடும் அளவுக்கு மாணவிகளைத் தள்ளிய அரசு மீது பெற்றோர்கள் கோபமடைந்துள்ளனர்.