புதுவையில் 9 மாதங்களுக்கு பிறகு.. 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
புதுவை: புதுவையில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஏற்கெனவே 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை இயங்கி வரும் நிலையில் இன்று 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை இயங்குகிறது.
கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பரவத் தொடங்கியது. இதையடுத்து இந்தியா முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் சிறு குறு தொழில்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை பள்ளி, கல்லூரி முதல் பல்கலைக்கழகங்கள் வரை அனைத்து மூடப்பட்டன.
கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை கற்கிறார்கள். இந்த நிலையில் புதுவையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் விநியோகம்
விருப்பமுள்ள மாணவர்கள்
அதன்படி விருப்பமுள்ள மாணவர்கள் பெற்றோரின் அனுமதி கடிதத்துடன் பள்ளிக்கு வருகிறார்கள். ஆசிரியர்களிடம் பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் இன்று முதல் பிற வகுப்புகளும் தொடங்கப்படுகின்றன.
எப்போது இயங்கும்
புதுவையில் 9 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் அரசு, தனியார் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. புதுவையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1,3,5,7 ஆகிய வகுப்புகளுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் பள்ளி இயங்கும்.
அனுமதி கடிதம்
2,4,8 ஆகிய வகுப்புகளுக்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் வகுப்புகள் இயங்கும். வருகை பதிவேடு கட்டாயமில்லை என்பதால் விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கிக் கொண்டு வர வேண்டும்.
புதுவையில் இயங்கும்
பள்ளிகளில் சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்படுவர். கொரோனா தடுப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படும். வரும் 18-ஆம் தேதி முதல் அனைத்து மாணவர்களும் பள்ளிகள் புதுவையில் வழக்கம் போல் இயங்கும்.