அவங்களுக்கு இப்போ நான்தான்.. எனக்கென்று இனம், மண், மொழி இருக்கு.. காங்கிரஸுக்கு எதுவுமில்லை.. சீமான்
காங்கிரஸ் கட்சியை சீமான் சரமாரி விமர்சித்துள்ளார்
புதுச்சேரி: "ஊருக்குன்னு ஒரு பிரச்சினை வந்தா, போராடாத இந்த காங்கிரஸ் கட்சி, என்னை எதிர்த்தாவது போராடுகிறதே... நான் ஒன்னும் பெரிய ஆளே இல்லை, ஆனா காங்கிரஸ்காரங்க தான் பெரிய ஆளாக ஆக்கி வருகிறார்கள். அவங்களுக்கு இப்போதைக்கு நான்தான்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 21 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவீனா மதியழகன் போட்டியிடுகின்றார். அவரை ஆதரித்து நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சீமான் வந்திருந்தார்.
ஏற்கனவே ராஜீவ்காந்தி விஷயமாக பேசியதால் காங்கிரஸ் தரப்பில் சீமான் மீது கடும் கோபத்தில் உள்ளனர். புதுச்சேரிக்கு சீமான் வந்தால் எதிர்ப்போம் என்று நாராயணசாமி பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
முதல்வர் இப்படி சொன்னதுமே, துணை ராணுவமும், போலீசாரும் குவிக்கப்பட்டு விட்டனர். இந்த சமயத்தில் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் சீமான் பேசினார்.
10 வருஷமா நான் இப்படி பேசி.. பலவழக்குகளை வாங்கி.. பல முறை சிறைக்கு போய்ட்டு வந்துட்டேன். எனக்குன்னு ஒரு அரசியல் இருக்கு. என் இனம், என் மொழி, என் காடு, என் நிலம், என் வளம், என் மலை, என் இனத்தின் எதிர்காலம் இதெல்லாம் இருக்கு. ஆனா, இந்த காங்கிரசுக்கு ஒன்னும் இல்லை.. அவங்களுக்கு நான்தான் இப்போ..
ஊருக்குன்னு ஒரு பிரச்சினை வந்தா, போராடாத இந்த காங்கிரஸ் கட்சி என்னை எதிர்த்தாவது போராடுகிறதே... நான் ஒன்னும் பெரிய ஆளே இல்லை, ஆனா காங்கிரஸ்காரங்க தான் பெரிய ஆளாக ஆக்கி வருகிறார்கள். அப்படி என்னை பெரிதுபடுத்தினால் அதை நான் வரவேற்கத்தான் செய்வேன்" என்றார்.