மோடியும்.. டிரம்ப்பும் வேறு வேறு அல்ல.. இருவருமே ஒன்றுதான்.. சீதாராம் யெச்சூரி பொளேர்!
புதுச்சேரி: பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகிய இருவரின் சித்தாந்தமும் ஒன்றுதான்.. பொருளாதாரத்தை பற்றி கவலைப்படாமல் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஆதரவாக மோடி பரப்புரை செய்கிறார்.. மத்திய பாஜக ஆட்சியில் கூட்டாட்சி கோட்பாடு கேள்விக்குறியாகியுள்ளது என புதுச்சேரியில் நடைபெற்ற கருத்தரங்கில் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் மாநில உரிமைகளும், மக்கள் விரோத மசோதாக்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கருத்தரங்கில் பேசிய அவர், ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல், ஒரே கல்வி முறை என்ற பாஜகவின் பிரச்சாரம் இந்தியாவின் பன்முகதன்மையை கேள்விக்குறியாக்கிவிட்டது. அரசின் ஜனநாயக விரோத நிலைப்பாட்டை நிராகரித்தால் உங்களை தேசவிரோதி என்று சொல்லி கைது செய்ய முடியும். இதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாஜகவை விமர்ச்சித்தாலோ, சமூக வலைதளத்தில் பதிவிட்டாலோ தீவிரவாதி எனக்கூறி சிறைக்கு செல்லும் வகையில் மனித உரிமை மீறள்கள் நடந்து வருகின்றது என்று குற்றஞ்சாட்டிய அவர், தேசத்தில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை. ஆனால் 2 லட்சம் கோடி ரூபாயினை பணக்கார முதலாளிகளுக்கு அரசு கொட்டி கொடுத்துள்ளது. இந்த மக்கள் விரோத அரசுக்கு எதிராக வரும் அக்டோபர் மாதம் 10 ந்தேதியில் இருந்து 16 ந்தேதி வரை நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் தேசத்தை பற்றி கவலைப்படாமல், பொருளாதாரத்தை பற்றிக்கவலைப்படாமல், டிரம்ப்புக்கு பரப்புரை செய்து வருகின்றார். பங்களாதேஷிலிருந்து ஒரு நடிகர் பரப்புரை செய்ய இந்தியா வந்தபோது அதை தடுத்தது இந்திய அரசு. ஆனால் டிரம்ப் மீண்டும் அதிபராக வரவேண்டும் என்று மோடி அமெரிக்காவிற்கு சென்று பரப்புரை செய்துள்ளார்.
இதிலிருந்து இருவரின் சித்தாந்தமும் ஒன்றுதான் என்பதை உறுதிசெய்துள்ளார் மோடி. மத்திய பாஜக ஆட்சியில் கூட்டாட்சி கோட்பாடு கேள்விக்குறியாகியுள்ளது. அரசியல் சாசனத்தின் உறுதிமொழிகள் அழிக்கப்பட்டு வருகின்றது என சீத்தாராம்யெச்சூரி குற்றம்சாட்டினார்.
கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், புதுச்சேரி மாநில செயலாளர் ராஜாங்கம் மற்றும் முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டனர்.