நிர்வாணப்படுத்தி நித்யானந்தா சீடர் கொடூரக் கொலை.. 7 பேர் மதுரையில் சரண்.. பரபர தகவல்கள்!
புதுச்சேரி: நித்யானந்தா சீடர் கொலை வழக்கில் ரவுடி உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். 12 லட்சம் பணத்திற்காக இந்த கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதுச்சேரி அருகே ஏம்பலம் பகுதியை சேர்ந்தவர் வஜ்ரவேல் (51). சாமியார் நித்யானந்தாவின் நெருங்கிய சீடரான இவர், ஏம்பலம் மற்றும் வில்லியனூர் பகுதிகளில் பேக்கரி நடத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி இரவு செம்பியப்பாளையம் பகுதியில் உள்ள தனது உறவினரிடம் ரூபாய் 2 லட்சம் பணத்தை வாங்கிகொண்டு காரில் சென்ற வஜ்ரவேல், அன்றிரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் பாகூர் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே கேட்பாரற்று நின்ற காரை போலீசார் சோதனையிட்டபோது, காரின் பின்பக்க இருக்கையில் வஜ்ரவேல் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் இதுகுறித்து வஜ்ரவேலின் குடும்பத்திற்கு தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். காரில் பேக்கரிக்கு தேவையான மூலப்பொருட்கள் அப்படியே இருந்தன. ஆனால் அவரிடம் இருந்த ரூபாய் 2 லட்சம் பணம் மட்டும் மாயமாகி இருந்தது. எனவே அவர் பணத்துக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் வஜ்ரவேலுவை கடத்தி கொலை செய்ததாக கரிக்கலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவுடி அய்யனார், ராஜவேலு, விஜய், அசோக் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் மதுரை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளனர்.
கொலை குறித்து போலீசார் தரப்பில் விசாரித்ததில், வஜ்ரவேலு பேக்கரி தொழிலுடன் சேர்த்து, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். மேலும் அவரது அக்காள் மருமகன் பிரகாஷ் என்பவர் ஏம்பலம் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இதனிடையே சீட்டு கட்டியவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் தராமல் பிரகாஷ் மோசடி செய்து விட்டு திடீரென தலைமறைவாகிவிட்டார்.
இந்த நிலையில் ஏலச்சீட்டு பணத்தை கேட்டு கடந்த சில மாதங்களாகவே வஜ்ரவேலுக்கு சிலர் நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால் அவர் எனக்கும், பிரகாசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி பணம் தர மறுத்து விட்டதாக தெரிகிறது.
பிரகாசிடம் ஏலச்சீட்டு மூலம் ரூபாய் 12 லட்சத்தை இழந்த ஒருவர் மட்டும் தொடர்ந்து வஜ்ரவேலிடம் பணத்தை கேட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த நபர்தான் கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடி ஐயனார் தலைமையிலான கும்பலை வைத்து வஜ்ரவேலை தீர்த்துகட்டியதாக போலீசாரின் தரப்பில் கூறப்படுகிறது.
மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள ரவுடி ஐயனார் தலைமையிலான 7 பேர் கொண்ட கும்பலை புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்துவதற்காக, தனிப்படை போலீசார் மதுரை விரைந்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் வஜ்ரவேல் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பன உள்ளிட்ட மற்ற விவரங்கள் தெரியவரும்.