ஆத்தாடி.. எத்தாத்தண்டி.. சிக்கிய ராட்சத சுறா.. வியந்த மீனவர்கள்.. ஆச்சரியத்தில் மக்கள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத சுறாவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து நாள்தோறும் புதுச்சேரி மற்றும் அருகில் உள்ள தமிழகப் பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் புதுச்சேரி வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களது விசைப்படகில் இன்று அதிகாலையில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பரசு என்பவரது வலையில் பெரிய மீன் ஒன்று சிக்கியது. மீனை மேலே இழுத்து பார்த்தபோது, அது சுறா என தெரியவந்தது.
இதனையடுத்து சுறாவை கையிற்றினால் கட்டி படகில் ஏற்றிய அவர்கள், தேங்காய்த்திட்டு துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் இதுகுறித்து மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இறந்த நிலையில் இருந்த சுறாவை மீன்வளத் துறையினர் வந்து ஆய்வு செய்தனர்.
ஆய்வில், 15 அடி நீளம் கொண்ட இந்த சுறா மீன் அம்மன சுறா என்றும், இதன் எடை மூன்று டன் வரை இருக்கும் என தெரிவித்தனர். இது சாப்பிடுவதற்கு பயன்படுத்த முடியாது என்றும், மேலும் இந்த மீன் மீனவர்களுக்கு தீங்கு விளைவிக்காது எனவும் அவர்கள் கூறினர். இதனிடையே ராட்சத சுறாவை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி மீனவர்கள் வலையில் இஸ்ரோ அனுப்பிய ராக்கெட்டின் பாகம் ஒன்று சிக்கியது குறிப்பிடத்தக்கது.