அமைச்சர் உறவினர் கொலை.. 6 பேர் சிக்கினர்.. உயிருக்கு பயந்து கொன்றது விசாரணையில் அம்பலம்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமியின் உறவினர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேருக்கு வலைவீச்சு.
புதுச்சேரி அருகே பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமியின் உறவினரான இவர், அமைச்சருக்கு உதவியாளராகவும் இருந்து வந்தார்.
அரசியல் முன்பகை காரணமாக அதிமுக மற்றும் என்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பலால் கடந்த 2017 ஆம் ஆண்டு வீரப்பன் நடுரோட்டில் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் வீரப்பனின் மைத்துனர் சாம்பசிவம் முக்கிய சாட்சியாக இருந்துவந்தார்.
படுகொலை
இந்நிலையில் அமைச்சர் கந்தசாமியின் நெருங்கிய உறவினரான சாம்பசிவம், தனது வீட்டில் நடைபெறவுள்ள சுபநிகழ்ச்சிக்கு உறவினர்களுக்கு பத்திரிக்கை கொடுப்பதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிருமாம்பாக்கம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் புதுச்சேரியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணை
இந்த கொலை வழக்கு தொடர்பாக கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில்,
பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த அமுதன், அவருடைய கூட்டாளிகளான கூடப்பாக்கம் அன்பு, மணிமாறன், சார்லி, கவியரசு, வழுதாவூர் ஜெகன் ஆகியோர் சாம்பசிவத்தை கொலை செய்தது தெரியவந்தது.
6 குற்றவாளிகள் கைது
இதனையடுத்து கரையாம்பத்தூர் ஏரிக்கரையில் பதுங்கியிருந்த அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் கைது செய்யும்போது அன்பு மற்றும் அமுதனுக்கு கை முறிவு ஏற்பட்டு மாவுகட்டு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மாவு கட்டுடன் கைது
இதனிடையே கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அமுதன், சாம்பசிவம் இருவருக்கும் இடையே பல நாட்களாக முன்விரோதம் இருந்தது வந்துள்ளது. இதனால் சாம்பசிவம், அமுதனை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார். இதையறிந்த அமுதன் முந்திக்கொண்டு சாம்பசிவத்தை கொலை செய்தது தெரியவந்துள்ளது.